முத்துக்குமார் ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை - வைகோ
சென்னை முத்துக்குமார் ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை. தமிழ் ஈழம் அமைய தாய் தமிழகம் ஆதரவாக நிற்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் உள்பட 16 பேர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னை திரு.வி.க. நகர் பஸ் நிலையம் அருகே நடந்தது.
கூட்டத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடு மாறன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்,
தனி ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக இதே நாளில் தன் இன்னுயிரை நீத்தவர் முத்துக்குமார். அவர் ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை.
முத்துக்குமார் உள்பட 16 பேரின் உயிர் தியாகம் நிச்சயம் வீண் போகாது. அவர்கள் ஏற்றி வைத்த நெருப்பு தொடர்ந்து எழும்.
அந்த வெளிச்சத்தில் தமிழ்ஈழம் மலரும். இது உறுதி. லட்சியத்திற்காக தீக்குளித்தவர்களை சிலர் கொச்சைப்படுத்தினார்கள். இதை யாராலும் ஜீரணிக்க முடியாது.
இலங்கையில் இன்று தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். முள்வேலியில் அடைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
தமிழ் ஈழம் மலர பிரபாகரன் மீண்டும் யுத்தம் நடத்த வருவார். ஈழத்தில் மக்கள் செய்த தியாகம் வீணாகி விடக் கூடாது. தமிழ் ஈழத்தை தட்டி எழுப்ப தாய் தமிழகம் துணை நிற்க வேண்டும் என்றார்.
நெடுமாறன் பேசுகையில், முத்துக்குமார் உள்பட 16 பேரின் தியாகம் வீண்போகாது. அவர்கள் லட்சியம், கனவு ஒரு நாள் நிறைவேறும்.
தமிழ் ஈழம் ஏற்பட்டால் தான் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதற்கு முத்துக்குமார் போன்றோரின் தியாகம் துணை நிற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications