இரை தேடி வந்து மின் வேலியில் சிக்கி 2 யானைகள் பலி
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே இரை தேடி வந்தபோது மின்சார வேலியில் சிக்கிய 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (56). இவரின் விளை நிலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு யானைக் கூட்டம் இரைத்தேடி வந்தன. மின்வேலி தெரியாமல் இரண்டு யானைகள் முனிகிருஷ்ணப்பாவின் நிலத்துக்குள் நுழைய முற்பட்டன.
அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்து இரண்டு யானைகள் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி உயிரிழந்தன. முனி கிருஷ்ணப்பா நிலத்தை பார்வையிட நேற்று சென்றபோது 2 யானைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதை மறைக்க திட்டமிட்டார்.
எனினும், அக்கம்பக்கத்து விவசாயிகள் மூலம் யானைகள் இறந்த சம்பவம் வனத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தெரிந்துவிட்டது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் கணேசன் தலைமையில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பலியான இரண்டு யானைகளுக்கும் சுமார் 35 முதல் 40 வயது இருக்கும். அதில் ஒரு பெண் யானை கர்ப்பமாக இருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications