சிக்கியது சிலை திருட்டுக்கும்பல்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விடுதியை முற்றுகையிட்டனர்.
விடுதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த இம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டம் செல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிலைகளை திருடியது தெரியவந்தது.
தமிழகத்தில் திருடப்படும் சிலைகளை பாதிரியார் இம்மானுவேல், புதுச்சேரி கோட்டங்குப்பத்தைச் சேர்ந்த மாரிசாமி மூலம் வெளி நாடுகளுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மாரிசாமியும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவை திருவண்ணாமலை, ஈசா குளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற திகம்பரர் ஜெயின் கோயிலிருந்து திருடப்பட்டுள்ளது.
இதேபோல சிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்ட நாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலை உயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானு வேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு கூடுதல் டிஜிபி திலகவதி இத்தகவலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications