அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சென்னையில் கைது
சென்னை: போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில், தேசியம் மற்றும் தெய்வீகத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, இந்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி சென்னையில் மைலாப்பூர், அயனாவரம், ஏழுகிணறு ஆகிய பகுதியில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போலீஸ் அனுமதி கோரி இருந்தது.
ஆனால், போலீசார் 31-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்துமாறு முதலில் அனுமதி அளித்தனர். பின்னர், திடீரென்று அந்த அனுமதியை ரத்து செய்தனர்.
இதனால், தடையை மீறி சென்னையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடையில் அணிவகுத்து நின்றனர்.
பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல, அயனாவரத்தில் 360 பேரும், யானைக்கவுனியில் 111 பேரும், மயிலாப்பூரில் 95 பேரும் என மொத்தம் 566 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராம. கோபாலன், மக்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறார்கள்.
84 ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், சென்னையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸ் அனுமதி தரவில்லை என்றார்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடுப்பது ஏன்?-பாஜக:
இந் நிலையில் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியத்தையும் தெய்வீகத்தையும், உயிர் மூச்சாக கருதி இயங்கி வரும் ஒப்பற்ற தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு ஊர்வலம் சென்னையில் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்க மறுத்த சென்னை காவல் துறையின் நடவடிக்கையை பா.ஜ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இத்தகைய ஊர்வலங்களுக்கு எந்த மாநிலத்திலும் குறிப்பாக இடது சாரிகள் ஆட்சி புரியும் மேற்கு வங்கம், கேரளாவில் கூட அனுமதி மறுப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.
ஆனால் தேச விரோத சக்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படுகிறது. இப்போக்கின் காரணமாகவே மாநிலத்தில் வன்முறை அதிகரித்து வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications