மாணவர்களுக்குள் மோதல்- பி.இ. மாணவரை கடத்தி காரில் வைத்து சித்திரவதை
சென்னை: சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது. இதில் ஒரு மாணவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர்.
சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கியும், தனி வீடு எடுத்து தங்கியும் படித்து வருகின்றனர்.
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இங்குள்ள ஹாஸ்டலிலும், கல்லூரியிலும் மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் மூளுவது சகஜமாம்.
எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன், முதலாம் ஆண்டு படித்து வருபவர் விகாஷ்சிங் (18). மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணியில் தனி வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
இவரது கோஷ்டிக்கும் இதே கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் சஞ்சீவ் குமார் (22) என்ற மாணவரின் கோஷ்டிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. சஞ்சீவ்குமார் ஜார்கண்ட்டைச் சேர்ந்தவர்.
சமீபத்தில், சஞ்சீவ்குமார் கோஷ்டியை சேர்ந்த மாணவரை விகாஷ் சிங் தாக்கியதாக கூறப்படுகிறது. இது சஞ்சீவ் குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்தனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கு விகாஷ்சிங் தனது நண்பர்கள் தீபக், தீபக்குமார் ஆகியோருடன் அருகில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது அங்கு 2 கார்களில் வந்து இறங்கிய சஞ்சீவ்குமார் மற்றும் அவரது கோஷ்டியினர் 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
விகாஷ் சிங்கை மட்டும் அடித்து கை, கால்களை கட்டி குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டனர். அவரை புதுச்சேரிக்குக் கொண்டு போய் சித்திரவதை செய்யத் திட்டமிட்டனர்.
காருக்குள்ளே வைத்தே அவரை ஆடைகளை கழற்றி அடித்து உதைத்துள்ளனர். இந்த நிலையில் விகாஷ் சிங் கடத்தப்பட்டது போலீஸாருக்குத் தெரியவந்தது.
கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சக்திவேலு மேற்பார்வையில் துணை கமிஷனர் திருஞானம் கண்காணிப்பில் உதவி கமிஷனர் முரளி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாணவனை உயிருடன் மீட்க போலீசார் அதிரடியாக களமிறங்கினர். போலீசார் தேடுவதை அறிந்த சஞ்சீவ்குமார் கோஷ்டி, ஜி.என்.டி. சாலை வழியாக தாம்பரம் தாண்டி மின்னல் வேகத்தில் சென்றனர்.
வண்டலூர் அருகே வந்த போது கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
உடனடியாக மற்றொரு கார் நிறுத்தப்பட்டது. அந்த காரில் இருந்த 3 பேர் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். விகாஷ் சிங் உயிர் பிழைத்தால் போதும் என்று காரில் இருந்து குதித்து தப்பினார். இதனால் புதுவைக்கு செல்லும் திட்டம் தடைப்பட்டது.
தப்பி வந்த விகாஷ் சிங் நண்பர்களுக்குப் போன் செய்து காப்பாற்றக் கோரி கதறியுள்ளார். வண்டலூர் விரைந்த தனிப்படை போலீஸாருக்கு இது தெரிய வந்து அவர்கள் விரைந்து சென்று விகாஷ் சிங்கை மீட்டனர்.
விகாஷ் சிங்கைக் கடத்தியவர்களில் சஞ்சீவ்குமார், விக்ரான், வினாய் ஆகிய 3 பேர் தப்பி விட்டனர்.
அந்தக் கும்பலைச் சேர்ந்த, காயமடைந்த ரவிசங்கர், அங்கீத், கவுரவ்சிங், பியூஸ், மாதவ், அபிஜீத்சிங் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் கும்பலில் இருந்தவர்களில் 5 பேர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிக்க வந்த இவர்கள் கோஷ்டி சேர்த்துக் கொண்டு அடிதடியில் இறங்கிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications