பென்னாகரம் இடைத்தேர்தல்: மீண்டும் தள்ளிப் போகுமா?
சென்னை: 30,000 வாக்காளர்கள் விடுபட்டதாக எழுந்துள்ள புகார் காரணமாக பென்னாகரம் சட்டசபைத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
பென்னாகரம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பென்னாகரம் தொகுதியின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிமுக உள்ளிட்ட 8 கட்சிகள் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளன.
கடந்த தேர்தலில் வாக்களித்த சுமார் 30,000 வாக்காளர்களின் பெயர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உட்பட அதிமுக கூட்டணியின் எட்டு கட்சிகள் தங்களின் புகார் மனுவை அளித்துள்ளன.
இதைத் தொடர்ந்து பென்னாகரம் தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
புகார் குறித்து முழு விசாரணை நடத்தி, குளறுபடியை சரி செய்யும் வரை பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இல்லை. எனவே பென்னாகரம் இடைத் தேர்தல் சற்று தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பென்னாகரம் தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தர்மபுரி மாவட்ட கலெக்டர் அமுதா விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தலை நடத்த தீர்மானித்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டோம்.
அதில் பென்னாகரம் தொகுதியில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 536 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 32 ஆயிரத்து 770 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க கோரி விண்ணப்பித்தனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நாங்கள் யார் பெயரையும் நீக்கவில்லை. சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் 2 இடங்களில் பதிவாகி இருந்தன. அதில் ஒரு இடத்தில் பெயர் நீக்கப்பட்டது.
மரணம் அடைந்துவிட்டவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன. ஆனால் இவை எல்லாம் கூட்டினால் சில நூறு தான் இருக்கும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை அகற்றக்கோரி சொற்ப அளவில்தான் விண்ணப்பங்கள் வந்தன. எனவே வாக்காளர் பட்டியலில் இருந்து 30,000 பேரை நாங்கள் நீக்கிவிட்டதாக சொல்வதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications