கள்ளக்காதல்: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சரவணன் (24) கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிண வாடை போன்ற துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
மேட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து அந்த கிணற்றிற்குள் இறங்கி தேடினார்கள். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சாக்குப்பை ஒன்று இருந்தது.
நேற்று காலை சாக்குப்பையை திறந்து பார்த்த போது உள்ளே தலை மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கிணற்றில் இறங்கி உடல் பாகங்களை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
கொலையானவரின் தலை சரவணனுடையது தான் என்பதை அவரின் பெற்றோர் உறுதி செய்தனர். உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடியபோது, கன்னங்குறிச்சி ஏரி அருகே சரவணனின் இடது கை, இடது கால் கிடந்தன. மற்ற உடல் உறுப்புகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், 'இந்த கொலை தொடர்பாக முருகேசன் (33), மாதையன் (32), செந்தில் என்கிற செந்தில் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சரவணன், மேட்டூரில் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். சரவணனுக்கும், அந்த காண்டிராக்டரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதைத் தெரிந்துகொண்ட காண்டிராக்டர், தொழிலாளி சரவணனை கொலை செய்ய திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கூலிப்படை சரவணனை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கூலிப்படையினர் சரவணனை கொலை செய்து, தலையை துண்டித்து, அதை செல்போன் மூலம் படம் பிடித்து, பணம் கொடுத்த நபரிடம் காட்டி கொலையை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications