ஹூஜி தீவிரவாத அமைப்புக்கு தென்னிந்தியாவிலிருந்து ஆளெடுப்பு - பிடிபட்ட தீவிரவாதி தகவல்
ஹைதராபாத்: இந்தியாவில் தீவிரவாத செயல்களை நடத்துவதில் பாகிஸ்தானும், வங்கதேசமும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளன என்பதை சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பின் முக்கிய நிர்வாகியான ஷேக் அப்துல் காஜாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஜனவரி 18ம் தேதி காஜா ஹைதராபாத்தில் வைத்து பிடிக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
காஜா கொடுத்துள்ள 2வது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவை சேர்ந்த அமிர் ரஸா கான், ரியாஸ் பத்கல் ஆகிய தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வருவதாக கூறியுள்ளார் காஜா.
ஐ.எஸ்.ஐ.யும் லஷ்கர் - இ தொய்பா இயக்கமும் சேர்ந்து இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனவாம்.
காஜா கொடுத்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
2005ம் ஆண்டு காஜா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதையடுத்து வெளியில் வந்த அவர் சவூதி சென்றார். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் சென்று விட்டார். தனது நண்பரும், ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பில் முக்கிய புள்ளியுமான ஷாஹித் பிலால் அழைப்பை ஏற்றுத்தான் அவர் பாகிஸ்தான் போயுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு வங்கதேசத்திற்கு அனுப்பி, ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
வங்கதேசத்தில் இருந்தபடி ஹூஜி அமைப்புக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பும் பணியை பிலாலும், காஜாவும் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் பிலால் கொல்லப்பட்டார். பிலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் ஆட்களை எடுத்து அனுப்பும் பொறுப்பு காஜாவிடம் வந்தது.
இந்தியாவுக்குள் ரூ. 33 லட்சம் கள்ள நோட்டுக்களை இந்தக் கும்பல் ஊடுறுவ விட்டது. இதிலும் காஜாவுக்குத் தொடர்பு உள்ளது. இதில் ஒரு பகுதி நோட்டுக்கள் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் சிக்கின.
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கராச்சியிலிருந்து கொழும்பு சென்றார் காஜா. பிலாலின் சகோதரர் ஷாஹித்திடம் கொடுப்பதற்காக ரூ. 50,000 கள்ள நோட்டுக்களையும் உடன் கொண்டு சென்றார். ஆனால் போலீஸிடம் சிக்கி விடுவோம் என பயந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் ஒரு பையில் போட்டு மறைத்து விட்டார்.
இருப்பினும் இலங்கை குடியுரிமைத் துறையினர் காஜாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஜனவரி 16ம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தார் காஜா. அங்கிருந்து ரயில் மூலம் ஹைதராபாத் சென்றார். 17ம் தேதி ஹைதராபாத் வந்து சேர்ந்த அவரால், தெலுங்கானா போராட்டம் காரணமாக வீடு போய்ச் சேர முடியவில்லை.
இந்த நிலையில் 18ம் தேதி பஸ் நிலையத்தில் வைத்து போலீஸாரிடம் சிக்கினார் காஜா.
கைது செய்யப்பட்ட காஜாவிடமிருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட், பாகிஸ்தான் அரசு அளித்த அடையாள அட்டை, ரூ. 50,000 இந்திய கள்ளப் பணம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications