கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: பாஜக
ஒசூர்: கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என பா.ஜ.க மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் சதீஷ், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், கே.என். லட்சுமணன், மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஜி.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு துணைத் தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், 'இந்து அறநிலையத்துறை அரசாணை எண்.25 (2008)ன் படி தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை விற்கவோ, நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை விதித்துள்ளது.
ஆனால் கோயில் நிலங்களை வணிக நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் நீண்டகால குத்தகைக்கு விடுவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு இந்து அறநிலையத்துறை அனுப்பியுள்ளது. இதைக் கண்டிக்கிறோம்' என்றார்.
செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்சனை:
இதற்கிடையே, இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் விடுத்துள்ள அறிக்கையில்,
'செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு இந்துக்களின் வழிப்பாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
ராமகோபாலன் வெளியிட்ட அறிக்கை: 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஞ்சி கோதண்டராமர் கோவில் ஆற்காடு நவாப் ஆக்கிரமிப்பால் பாழடைந்து போனது. அதன்பிறகு வந்த ஆக்கிரமிப்பான ஆங்கிலேய, பிரெஞ்சு போன்ற அரசுகளாலும் செஞ்சி புறக்கணிக்கப்பட்டு வந்தது.
இத்தனை சோதனைகளுக்குப் பிறகும் செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வருடந்தோறும் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது நடந்த சமாதான கூட்டத்தில் 1878ம் ஆண்டு கிரய பத்திரத்தை காட்டிய கிறிஸ்தவர்கள், அதில் குறிப்பிட்டிருந்த கோவில்மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என்று குறிப்பிட்டிருப்பதை மறைத்ததுடன், அத்துடன் கூடிய மூலப்பத்திரத்தையும், கோவில் டிரஸ்ட் சம்பந்தமான பத்திரம் பற்றி மூலப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளவற்றையும் சமர்ப்பிக்கவில்லை.
இதுபோன்ற வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போதுமான சட்டங்கள் மத்திய, மாநில அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவிலை யாருக்காவது விற்பது சட்டப்படி செல்லாது.
இந்துக்கள் வழிபட அனுமதி மறுத்த தாசில்தார், அத்துமீறி கோவிலுக்குள் சென்று இந்துக்களை கேவலப்படுத்தி மனம் புண்படுத்திய பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் ஆகியோர் மீது காவல்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications