முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தவறான தகவல்கள் - கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பு அளவை உயர்த்தாமல் தடுக்க கேரள அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மற்றும் இதர விவகாரங்கள் தற்போது அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு விடப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கி நடந்து கொண்டுள்ளது.
நேற்று நடந்த விசாரணையின்போது கேரள அரசு வக்கீலின் வாதத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
கேரள அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹரீஷ் சால்வே வாதிடுகையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு முக்கிய கவலைகள் உள்ளன. ஒன்று, அணையில் அதிகபட்ச நீர் இருப்பு குறித்தது. இன்னொன்று அணையின் பலம் குறித்தது.
கன மழை பெய்தால் பெரும் வெள்ளம் ஏற்படும். அணையில் நீர் மட்டம் உயர்ந்து உபரி நீர் பெருமளவில் வெளியேறினால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். லட்சக்கணக்கான மக்களின் உயிர்களும் கேள்விக்குறியாகி விடும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பெரும் மழை பெய்தால் எவ்வளவு தண்ணீர் அணைக்கு வரும் என எதிர்பார்க்கிறீர்கள், அதிலிருந்து அணையைப் பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த சால்வே, அணையின் பாதுகாப்பு நிச்சயம் கேள்விக்குறியாகி விடும் என பொதுவான பதிலைக் கொடுத்தார்.
அப்போது நீதிபதி சர்மா குறுக்கிட்டு, எனவே புதிய அணையைக் கட்டி அதை உங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்றார். அதற்கு சால்வே ஆமாம் என்று தலையாட்டினார். பின்னர் கூறுகையில், இந்தியா பூகம்பத்தால் பாதிக்கப்படும் நாடாகும். 3வது மண்டலத்தின் கீழ் அது வருகிறது. பூகம்பம் ஏற்பட்டால், அணையில் உள்ள பெருமளவிலான நீர் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.கே.ஜெயின், 142 அடி வரை நீரைத் தேக்கி வைத்தால், எவ்வளவு பகுதிகள் நீரில் மூழ்கும் எனக் கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சால்வே பதிலளிக்கவில்லை. தொடர்ந்து நீதிபதி லோத்தா குறுக்கிட்டு, இதுதொடர்பாக உங்களிடம் ஏதேனும் புள்ளி விவரத் தகவல்கள் இருக்கிறதா என்றார்.
அதற்கு சால்வே பதிலளிக்கையில், வெள்ளம் ஏற்பட்டால், பெருமளவிலான பகுதிகள் நிச்சயம் நீரில் மூழ்கி விடும். 27 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய நீர் ஆணையம் பிறப்பித்த அறிவுறுத்தலில் 136 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்குமாறு கூறியுள்ளது. கேரள அரசு இயற்றிய சட்டமும் அதையேதான் சொல்கிறது என்றார்.
ஆனால் இந்தப் பதிலுக்கு அனைத்து நீதிபதிகளுமே அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதி லோத்தா கூறுகையில், உங்களது வாதம் எந்தவித சத்தும் இல்லாமல் உள்ளது. பொய்யான, தவறான வாதமாக படுகிறது. வார்த்தை ஜாலமாகவே உள்ளது என்றார்.
இதையடுத்து குறுக்கிட்ட சால்வே, உங்கள் கேள்விக்கு நேரடியாகவே பதிலளிக்கிறேன் என்றார். ஆனால் நேற்றைய வாதம் முடியும் வரை அவர் பதில் தரவே இல்லை.












Click it and Unblock the Notifications