முல்லைப் பெரியாறு: அணை பிரச்சினையா, நீர் பிரச்சினையா - சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம், கேரளாவுக்கு இடையே நிலவுவது தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையா அல்லது அணையை நிர்வகிப்பதில் பிரச்சினையா என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
நீர் பிரச்சினை என்றால் இதை நாங்கள் எப்படி விசாரிக்க முடியும். நடுவர் மன்றம்தான் விசாரிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பராசரசன், இது தண்ணீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினை அல்ல என்று விளக்கமளித்தார்.
டி.கே. ஜெயின் தலைமையிலான அரசியல் சட்ட பெஞ்ச் முன்பு, நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம். லோதா, தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் முல்லைப் பெரியாறு வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது.
தமிழகம் சார்பில் வழக்கறிஞர் கே.பராசரனும் கேரளம் சார்பில் ஹரீஷ் சால்வேயும் வாதிட்டனர்
நேற்று நீண்ட நேரம் விவாதம் நடந்தது. அப்போது, நீதிபதி டி.கே.ஜெயின், இப்போதைய பிரச்னையே அணையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதுதான் என்றார்.
அப்போது கேரள வக்கீல் ஹரீஷ் சால்வே வாதிடுகையில்,
நடுவர் மன்றத்தின் அதிகார வரம்பு எது என்ற சந்தேகம் வந்தால் நீதிபதிகள் (5 உறுப்பினர் பெஞ்ச்) தீர்மானிக்கலாம்; இது தண்ணீர் பிரச்னை அல்ல என்ற முடிவுக்கு பெஞ்ச் வந்தால், கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகும்.
என்னுடைய நண்பர் (பராசரன்), இந்த வழக்கில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்கிறார். சட்டப்படியாக தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது? இது இரு மாநிலங்களுக்கு இடையிலான அணை நிர்வாகம் பற்றிய ஒப்பந்தம் பற்றிய வழக்கு என்றால், நான் அந்த ஒப்பந்தத்தையே ஏற்க முடியாது என்று நிராகரிப்பேன் என்றார்.
மேலும் அவர் வாதிடுகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அலமட்டி அணை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு பற்றி அப்போது அவர் உதாரணம் காட்டினார். நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்துப் பேசினால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியது நதிநீர் ஆணையம்தானே தவிர உச்ச நீதிமன்றம் அல்ல என்று அப்போது நீதிமன்றமே குறிப்பிட்டிருக்கிறது.
இப்போது தமிழகம் இந்த வழக்கின் மூலம் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைத் தனக்குப் பயன்படுத்துவது தொடர்பாகத்தான் வழக்கைத் தொடர்ந்திருக்கிறது. எனவே நதி நீர் பிரச்னைகளைத் தீர்க்க ஏற்படுத்தப்படும் நடுவர்மன்றம்தான் இதை இரு மாநில நலன்களுக்கும் பாதிப்பு வராமல் தீர்க்க முடியும் என்றார் சால்வே.
அப்போது பராசரன் குறுக்கிட்டு, வழக்கு அணையைப் பற்றியதுதான். அணையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அதில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்துவதும் ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட, கேரளத்தால் ஆட்சேபிக்கப்படாத நதி நீர் ஒப்பந்தப்படி தானாகவே நடைபெறும்.
அணையில் நீர் தேக்கும் அளவை அதிகரிப்பது பற்றியதுதான் வழக்கு என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, கேரளம் உத்தேசித்துள்ளபடி புதிய அணை கட்டினால் இப்போதுள்ள ஆயக்கட்டு பரப்பு குறைந்துவிடுமா என்று விளக்கம் கேட்டது.
இதற்குப் பதிலளித்த சால்வே, இந்த வழக்கு வெறும் அணை உயரம் பற்றியதோ, தண்ணீர் பகிர்வு பற்றியதோ மட்டும் அல்ல, பல அரசியல் சட்டப் பிரச்னைகளை உள்ளடக்கிய நுணுக்கமானது என்றார். இருப்பினும் அந்த அரசியல் சட்டப் பிரச்சினை என்ன என்பதை அவர் விளக்கவில்லை.
இதையடுத்து வழக்கு வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் வாதம் தொடருகிறது.
சுப்பிரமணியம் சாமி ஆஜராகிறார்:
இந்த நிலையில் அரசியல் சாசன பெஞ்ச் முன்பு தான் ஆஜராகி வாதாடவிருப்பதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக தென் மாவட்ட விவசாயிகள் நான் ஆஜராகி வாதிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே நான் அரசியல் சாசன பெஞ்ச் முன்பு ஆஜராகி விவசாயிகள் தரப்பி்ல் வாதிடவுள்ளேன்.
நான் மிகவும் போராடி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் தமிழக அரசு அதை வீணாக்கி விட்டது. மேலும் அதை பயன்படுத்தக் கூட திராணியில்லாமல் தயங்கிக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தாலும் கூட அரசு தயக்கம் காட்டுவது வருத்தத்திற்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications