கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் அழகிரியுடன் சந்திப்பு-பதவியை பறித்தார் ஜெ

இதையடுத்து அவரது கட்சிப் பதவியைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்கினால் அவரது எம்எல்ஏ பதவி தப்பிவிடும் என்பதால் அவரை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கவில்லை.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தூத்துக்குடி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அனிதா ராதாகிருஷ்ணன் தான் இன்று காலை கோவில்பட்டி அதிமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணனை மதுரைக்கு அழைத்து வந்தார்.
அங்கு மு.க.அழகிரியை இருவரும் சந்தித்துப் பேசினர்.
அழகிரியை சந்தித்த எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அவரிடம் ஒரு மனுவைக் கொடுத்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி பிரச்சனைகள் தொடர்பாகவே நான் அழகிரியை சந்தித்து மனு கொடுத்தேன்.
சட்டசபையி்ல் தொகுதிப் பிரச்சனை தொடர்பாக பேச கட்சித் தலைமை அனுமதிப்பதில்லை. இதனால்தான் அமைச்சர் அழகிரியை சந்தித்து மனு கொடுத்தேன்.
இதற்காக கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தால் அதை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
அமைச்சர் அழகிரி கூறுகையில், தொகுதிப் பிரச்சனை தொடர்பாக ராதாகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளார். பொதுவாக முதல்வர் கருணாநிதி எந்த்த தொகுதி, எந்தக் கட்சி என்று பாகுபாடு பார்ப்பதில்லை. கோவில்பட்டி எம்.எல்.ஏவின் மனுவை முதல்வருக்கு அனுப்பி வைப்பேன். முதல்வரிடம் இது சம்பந்தமாக பேசுவேன் என்றார்.
மேலும் சென்னை சென்று தலைவரை பாருங்கள் என்று ராதாகிருஷ்ணனிடம் அழகிரி கூறினார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனும் அனிதா ராதாகிருஷ்ணனும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க சென்னை கிளம்பினர்.
இந் நிலையில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக இன்று பிற்பகலில் ஜெயலலிதா அறிவித்தார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்.ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ராதாகிருஷ்ணனை கட்சியை விட்டு நீக்கவில்லை ஜெயலலிதா. அவரை கட்சியை வீட்டு நீக்கினால் அவரது எம்எல்ஏ பதவி தப்பிவிடும்.
அதே நேரத்தி்ல் அவர் திமுகவுக்குத் தாவினால் கட்சித் தாவல் தடைச் சட்டப்படி எம்எல்ஏ பதவி தானாகவே போய் விடும். இதனால் திமுகவில் இணைய ராதாகிருஷ்ணன் விரும்பினால் அவராகவே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்.
ஆனால், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இடைத் தேர்தலுக்கு வழி வகுப்பாரா அல்லது எஸ்.வி.சேகர் பாணியில் பதவியை விட்டுத் தராமல் சட்டசபையில் சுயேச்சையாக மாறி திமுகவை ஆதரிப்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications