மும்பையில் ராகுல்-மின்சார ரயிலில் பயணம்- சிவசேனா போராட்டம்: பலர் கைது

முதலில் கலந்து கொண்ட விலே பார்லே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உள்ளூர் மின்சார ரயிலில் பயணம் செய்து அடுத்த இடமான கட்கோபரை அடைந்தார் ராகுல்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று காலை மும்பை வந்து சேர்ந்தார். அவருக்கு சிவசேனா கட்சியினர் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்ததால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மும்பை வந்த புறநகரான விலே பார்லே பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பைதாஸ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களை சந்தித்தார்.
அப்போது கருப்பு சேலை கட்டியபடி ராகுலுக்கு கருப்புக் கொடி காட்ட வந்த சிவசேனா கவுன்சிலர் ராஜுல் படேல் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் ராகுலின் நிகழ்ச்சி எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்தது.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட ராகுல் அடுத்து கட்கோபருக்குக் கிளம்பினார். அவருக்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தான் மின்சார ரயிலில் பயணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்புக்குப் பிரச்சினை வருமே என்று பயந்தனர்.
ஆனால் அதை நிராகரித்த ராகுல் தான் விரும்பியபடியே மின்சார ரயிலைப் பிடித்து அதில் கட்கோபருக்குப் பயணம் செய்தார்.
தங்களுடன் ராகுலும் மின்சார ரயிலில் பயணம் செய்வதைப் பார்த்து சக பயணிகள் பெரும் வியப்படைந்தனர்.
பின்னர் அவர் கட்கோபர் சென்றடைந்தார். அங்கிருந்து ரமாபாய் காலனிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராகுல், அங்கு சேரி வாழ் இளைஞர்களை சந்தித்து உரையாடினார்.
சிவசேனாவினர் கைது...
முன்னதாக ராகுலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
மொத்தம் 2 எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
பைதாஸ் ஹாலுக்குள் புக முயன்ற எம்.எல்.ஏ. ரவீந்திர வெய்கர் கைது செய்யப்பட்டார். அதேபோல பிற பகுதிகளில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. வினோத் கோஸல்கர் உள்ளிட்ட சிலர் கைதானார்கள்.
அதேபோல கட்கோபர் வழியாக ராகுல் சென்றபோது கருப்புக் கொடி காட்ட முயன்ற 50 சிவசேனாவினர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல ராகுல் காந்தி வருவதற்கு முன்பு அவரது ஹெலிகாப்டர் வந்து இறங்கிய பவன் ஹன்ஸ் ஹேலிபேடு பகுதியில் திரண்ட சிவசேனாவினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications