அத்தியவாசியப் பொருட்களின் சி்ல்லறை விலைக்கு உச்சவரம்பு நிர்ணயம்- தமிழகம் வலியுறுத்தல்

டெல்லியில் இன்று தொடங்கிய முதல்வர்கள் மாநாட்டில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். முதல்வர் கருணாநிதியின் உரையை அவர் வாசித்தார்.
அப்போது அவர் பேசுகையில், உயர்ந்து வரும் விலைவாசியைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க சில அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கு உச்சவரம்பை நிர்ணயிக்கலாம். அத்தியாவசியப் பொருள் சட்டத்தின் 3ஏ பிரிவைப் பயன்படுத்தி இதை அரசு செய்ய முடியும்.
இந்த சட்டத்தின் கீழ் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழி உள்ளது. இதை மேலும் உறுதியுடன் அமல்படுத்த வேண்டும்.
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அரிசி மற்றும் கோதுமையின் அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு மானிய விலையில் கூடுதலாக இவற்றை விநியோகிக்க முடியும்.
கோதுமை இருப்பு தற்போது அபரிமிதமாக உள்ளது. எனவே ரேஷன் கடைகளுக்கான கோதுமை ஒதுக்கீட்டு அளவை மேலும் அதிகரிக்க வேண்டும். தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல் நிரந்தரமாகவே இதை அதிகரிக்க வேண்டும்.
மேலும் சர்க்கரை தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் கட்டுப்படுத்த அதிக அளவிலான சர்க்கரையை இறக்குமதி செய்து விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல மாநில அரசு நிறுவனங்களும் சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும் இறக்குமதிக்கு மானியமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல எண்ணை வித்துக்கள், தானிய வகைகளின் உற்பத்தியை ஊக்குவிக்க குறைந்தபட்ச ஆதரவு விலையை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
விலைவாசியைக் குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. இப்போதைய முக்கியத் தேவை குறிப்பிட்ட பொருட்களின் விலையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை கூடுதல் கவனத்துடன் எடுப்பதுதான்.
அதாவது பற்றாக்குறையாக உள்ள பொருட்களின் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
நிலைமையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் கிலோ அரிசி ரூ. 1க்கு விற்கப்படுகிறது. மேலும் பருப்பு, சமையல் எண்ணை, கோதுமைப் பொருட்களை ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அளித்து வருகிறோம்.
மேலும் அன்றாடச் சமையலுக்குத் தேவையான பத்து பொருட்களை பாக்கெட்களில் போட்டு ஒரு பாக்கெட் ரூ. 50 என்ற குறைந்த விலையில் அளித்து வருகிறோம் என்றார் ஸ்டாலின்.
மம்தாவுடன் ஸ்டாலின் சந்திப்பு:
இந் நிலையில் ஸ்டாலின் இன்று டெல்லியில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
இன்று காலை முதல்வர்கள் மாநாடு துவங்கும் முன் அமைச்சர் மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஸ்டாலின்.
அப்போது, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டப் பணிகள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் தேக்கமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இந்தத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்தி முடிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
கோரிக்கையை கேட்டுக் கொண்ட மம்தா, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வரும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications