டெல்லியில் சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை
டெல்லி: தமிழகத்துக்கான பல்வேறு நலதிட்டங்களை நிறைவேற்றவும், கூடுதல் நிதி ஒதுக்குமாறு கோரியும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் முக்கிய அமைச்சர்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பயணத்தின் ஒரு கட்டமாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று சந்தித்தார். தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஸ்டாலின் முன்வைத்தார்.
சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்,
'ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, கோதாவரி படுகைகளில் இருந்து கிடைக்கும் எரிவாயு, தமிழகத்துக்கும் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று சோனியாவிடம் வலியுறுத்தினேன்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கு எரிவாயு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ரூ.240 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு சார்பாக ரூ.120 கோடியும், தமிழக அரசு சார்பாக ரூ.120 கோடியும் செலவிடப்பட உள்ளது.
ஆனால், மத்திய அரசு சார்பிலான நிதி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்குமாறு சோனியாவிடம் கோரிக்கை விடுத்தேன்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஆலோசித்து தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா உறுதி அளித்தார்' என்றார்.
முன்னதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் கமல்நாத்தையும் அவரின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
செம்மொழி மாநாடு நடைபெற உள்ள நிலையில் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு கமல்நாத்திடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து, வரும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications