காவல் நிலையங்களில் விசாரணை நடத்த தடை: லத்திகா சரண்
சென்னை: குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் புகார் கொடுத்தவர்களை காவல்நிலையத்துக்கு வரச்சொல்லி விசாரிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போலீசாரே நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்று தமிழக போலீசாருக்கு காவல்துறை டிஜிபி லத்திகா சரண் உத்தவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகர காவல் துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி லத்திகா அனுப்பியுள்ள உத்தரவில்,
'புகார் கொடுத்தவர், குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க கூடாது. சம்பவம் நடந்த இடத்திற்கே இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் நேரடியாக சென்று மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.
போலீஸ் நிலையங்களில் கூட்டம் சேர்க்க கூடாது. கொலை, கொள்ளை போன்ற முக்கிய வழக்குகளை மட்டுமே போலீஸ் நிலையங்களில் விசாரிக்க வேண்டும்.
பெண்கள் பிரச்னை, சாதாரண பிரச்னைகளுக்கு கிராமங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். கிராம பஞ்சாயத்தாரை இன்ஸ்பெக்டர் அல்லது எஸ்.ஐ அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்.
பெண்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவரக் கூடாது. இரவில் குற்றவாளிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது.
குடிநீர், மின்சாரம், சாலை வசதி என்று பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்' என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து லத்திகா சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், 'சிறு சிறு பிரச்னைகளுக்கு பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் காத்திருப்பதாக நிறைய புகார்கள் வருகின்றன.
அதனால் தான் போலீசாருக்கு சில கெடுபிடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் 2வது முறை குற்றங்கள் நடந்தால், விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படும் விதம் குறித்து, மாதத்துக்கு ஒரு முறை நானே மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளேன்' என்றார்.












Click it and Unblock the Notifications