தமிழினித்தை இழிவுபடுத்திய ஜெயராமுக்கு மன்னிப்பு, எங்களுக்கு சிறையா? - சீமான் ஆவேசம்
சென்னை: வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார் ஜெயராம். அவருக்கு மன்னிப்பு, அதை எதிர்த்துப் போராடிய எங்களுக்கு சிறையா என்று ஆவேசமாக கேட்டுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.
சீமான் மீது இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வன்முறையைத் தூண்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கை..
மலையாள நடிகர் ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார். இது ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்.
இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வெற்றியுடன் வெளி வருவார்கள்.
இந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக தமிழக அரசு இன்று என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது என்னை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும்.
இந்த விஷயத்தில் வன்முறையைத் தூண்டியது நானா? மலையாள நடிகர் ஜெயராமா? என்பது உலகிற்குத் தெரியும்.
உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில் மிகவும் இழிவாக ஒரு கருத்தைச் சொல்லி விட்டு அதன் பின்பு உலகம்
முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடனும் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடனும் நடிகர் ஜெயராம் மன்னிப்புக் கோரி உள்ளார்.
உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கா விட்டால் இந்நேரம் அவர் கருத்து வரலாற்றில் அப்படியே பதிவாகியிருக்கும். தமிழர்களைப் பற்றிய கருத்து வரலாற்றில் கேட்பாரற்று போயிருக்கும். நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டமே அவர் மன்னிப்பு கேட்டதற்கு காரணம். அவரது பேச்சே அவருக்கு எதிரான இப்படிப்பட்ட செயல்பாட்டிற்குக் காரணம்.
ஆகவே வன்முறையை தூண்டியது நானல்ல. ஜெயராம் தான். வன்முறையை நான் எப்போதுமே விரும்பியது இல்லை. அவர் மீது தான் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும். அவரது காலம் கடந்த மன்னிப்பு பிரச்சினைக்குத் தீர்வாகாது. அவருக்கு மன்னிப்பும் நாம் இயக்கத்தவர் மீது சிறை என்பதும் மோசடியான ஒன்று.
மன்னிப்பு தான் பிரச்சினைக்குத் தீர்வென்றால் கொடும் குற்றம் இழைக்கும் ஏனைய குற்றவாளிகள் விஷயத்திலும் தமிழக அரசு இதனைப்பரீசிலிக்குமா? மற்றபடி என்மீது போடப்பட்ட வழக்கு கண்டு நான் பயப்படவில்லை.
இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ளது. அதனைக் கண்டு அச்சப்பட மாட்டேன். எதிர்த்து வழக்காடி வெளி வருவேன் என்று கூறியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications