ஸ்டாலின் வாழ்த்தினால் தமிழகமே வாழ்த்தியதற்குச் சமம்- தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவருமான சிவபுண்ணியத்தின் மகள் திருமணம் மன்னார்குடியில் நடைபெற்றது.
தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில், தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் அமைச்சர்கள் கோ.சி.மணி, மதிவாணன், உபயதுல்லா, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தா.பாண்டியன் பேசும்போது, இளம் துணை முதல்வர் வாழ்த்துரை வழங்கினால் தமிழகமே வாழ்த்துரை வழங்கியதாக அர்த்தம். அதனால்தான் துணை முதல்வர் ஸ்டாலினை வாழ்த்த அழைக்கிறேன் என்றார்.
பின்னர் பேசிய ஸ்டாலின், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் கஷ்டமான நிலையில் இருந்தேன். நேற்று கூட டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் கலைஞரை சந்தித்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். சரி என்றார்.
பின்னர் நாளை மன்னார்குடி சிவபுண்ணியம் மகள் திருமணம் என்று நான் சொன்னவுடன், உடனே செல் என்றார் கலைஞர். கலைஞர் சொன்னதும் இங்கு வந்த எனக்கு ஒரு வாரமாக இருந்த கஷ்டம் போய்விட்டது. அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியளிக்கக் கூடிய விழாவாக இது அமைந்திருக்கிறது.
சிவபுண்ணியம் ஒவ்வொரு முறையும் கலைஞரிடம் தொகுதி மேம்பாட்டுக்கு கோரிக்கை வைக்கும்போது மன்னையின் ஆசை என்று சொல்லுவார். மன்னையின் பெயரை சொல்லித்தான் தொழில் பூங்கா கேட்டார்.
மன்னார்குடி தாலுகா மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக உயர்த்த கலைஞரிடம் சிவபுண்ணியம் கோரிக்கை வைத்தார். இதற்கு அமைதியாக இருந்த கலைஞர், இந்த திருமணத்திற்கான வாழ்த்துச் செய்தியை கொடுக்கும் போது மற்றொரு செய்தியையும் கொடுத்தார்.
அதை சிவபுண்ணியம் மகள் திருமணத்தின் பரிசு என்று சொல்லி விட்டு அறிவிக்கச் சொன்னார். அதுதான் திருவாரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்து விட்டதால் மன்னார்குடிக்கு மாவட்ட மருத்துவமனையை திருமண பரிசாக வழங்கிறேன் என்று கூறியுள்ளார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications