திமுக அரசின் திட்டங்கள் இந்தியா பூராவும் பரவியுள்ளது - ஸ்டாலின்
சென்னை: சொன்னதையே செய்வோம், செய்வதையே சொல்வோம் என்று முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. திமுக அரசின் திட்டங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளது என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் மெரீனா மற்றும் பெரும்பாக்கத்தில் லிப்ட் வசதியுடன் கூடிய 26 ஆயிரத்து 144 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இதேபோல், செம்மஞ்சேரியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழா சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில்,
குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்ட 1970 முதல் 2006 வரை 36 ஆண்டுகளில் 77 ஆயிரத்து 627 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. 5-ம் முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்ற 2006 முதல் 5 ஆண்டு காலத்திற்குள் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 82 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 42 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 40 ஆயிரம் குடியிருப்புகளில், இன்று 26 ஆயிரம் குடியிருப்புகள் பெரும்பாக்கம் மற்றும் மெரினா பகுதிகளில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 14 ஆயிரம் குடியிருப்புகளின் திட்டப்பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும். இங்கு பேசிய குடிசைமாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், இன்று அடிக்கல் நாட்டிய குடியிருப்புகள் 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
2006-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற 3 ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் இத்திடத்தினை 2 ஆண்டுகளில் முடிக்குமாறு அத்திட்டத் தொடக்க விழாவில் கேட்டுக்கொண்டார். முதல்வர் அவர்களின் உத்திரவிற்கு இணங்க நாங்களும் வேகமாக செயல்பட்டு 11/2 ஆண்டுகளில், இத்திட்டத்தினை முடித்தோம்.
அதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தினை விரைந்து நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். அதுபோலவே, இந்த குடியிருப்பு திட்டத்தையும் 15 மாதங்கள் என்றில்லாமல், ஓர் ஆண்டிற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு கட்டி முடித்தால் நானே முதல்வரிடம் பேசி துறை அதிகாரிகளுக்கு பரிசுகளை வாங்கித்தருவேன் என்று உறுதியளிக்கிறேன்.
நான் சமீபத்தில் டெல்லி சென்ற போது பிரதமர், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து உரையாடியபோது, அனைவரும் என்னிடத்தில் ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் 21 லட்சம் நிரந்தர கான்கிரீட் வீடுகளை எப்படி கட்டித்தருவீர்கள் என்று கேட்டனர். அதற்கு நான் இந்த நிதியாண்டில் 3 லட்சம் வீடுகள் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும், வரும் 6 ஆண்டுகளில் படிப்படியாக 21 லட்சம் வீடுகளையும் கட்டி, தமிழகத்தினை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் பணியினை தலைவர் கலைஞர் நிறைவேற்றுவார் என்று எடுத்துக் கூறினேன்.
எப்படி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினோமோ அதுபோலவே இத் திட்டத்தையும் செயல்படுத்துவோம் என்று விளக்கி கூறினேன். இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துவதாக பல மாநில முதல்வர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
சொன்னதையே செய்வோம், செய்வதையே சொல்வோம் என்று தலைவர் கலைஞர் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications