சரத்குமார் கட்சி-நல்லவேளை பேப்பர்ல செய்தி போட்டாங்க!
வள்ளியூர்: தமிழகத்தில் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.
நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வள்ளியூரி்ல் நேற்று நடைபெற்றது. நெல்லை கிழக்கு, மேற்கு, மாநகரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசுகையில், 'விருதுநகரில் காமராஜர் மணிமண்டப கட்டுமான பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும்.
இதில் ஓவ்வொரு ச.ம.க தொண்டரும் தன்னுடைய உழைப்பை வழங்கிட வேண்டும். மணிமண்டப கட்டுமான பணியில் தமிழக மக்கள் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும்' என்றார்.
மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும்; பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், தமிழக சட்டசபைக்கு வர இருகிற பொதுத் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக இடங்களை பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக உள்ள சரத்குமார் சமீப காலமாக சினிமா வேலைகளில் மும்முரமாக இருந்து வந்தார்.
எடிட் செய்யும் முன்பாகவே இன்டர்நெட்டில் தனது படமான ஜக்குபாய் ரிலீஸ் செய்யப்பட்டதில் ஆடிப்போன சரத்குமார் அதுதொடர்பான விவகாரத்திலேயே மூழ்கிக் கிடந்தார்.
இதனால் நடிகர் கார்த்திக்கைப் போல கட்சியை காணாமல் போகச் செய்துவிடுவாரோ என தென் மாவட்டங்களில் உள்ள ச.ம.க நிர்வாகிகள் புழுங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மக்கள் மத்தியில் கட்சியை நினைவுபடுத்தும் விதமாக இந்த நிர்வாகிகள் கூட்டத்தை சரத்குமார் நடத்தியிருக்கிறாரோ என பத்திரிகைகள் நையாண்டி செய்துள்ளன.
'தினமணி' நாளிதழின் நேற்றைய கார்ட்டூன் இது:
'இன்று சரத்குமார் கட்சி நிர்வாகிகள் கூட்டமாம்! நல்லவேளை பேப்பர்ல செய்தி போட்டாங்க...! இல்லாட்டி இவர் இன்னும் கட்சி நடத்திக்கிட்டிருக்கிறதே எனக்கு மறந்து போயிருக்கும்' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications