காதலர் தினத்தை எதிர்க்கும் ஸ்ரீராம் சேனா தலைவர் முகத்தில் கரி பூசி போராட்டம்

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு ஸ்ரீராம் சேனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது கலாச்சாரத்திற்கு விரோதமானது, எனவே கொண்டாடுவதை அனுமதிக்க மாட்டோம் என அதன் தலைவர் முத்தலிக் கூறியுள்ளார்.
மேலும் நேற்று பெங்களூர் டவுன்ஹால் அருகே காதலர் தினம் தேவையா என்ற தலைப்பில் கருத்தரங்கையும் நடத்தினர். இதில் முத்தலிக் கலந்து கொண்டார். காதலர் தினத்தைக் கண்டித்து முத்தலிக் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இளைஞர்கள் கூட்டம் ஒன்று உள்ளே ஓடி வந்தது. நேராக முத்தலிக்கிடம் சென்ற அவர்கள் கையில் வைத்திருந்த கருப்பு மையை அவரது முகத்தில் பூசி அபிஷேகம் செய்தனர். இதனால் முகம் முழுவதும் கருப்பாகிப் போனது.
அவரை கீழே தள்ளி உதைக்கவும் முயன்றனர். ஆனால் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளே வந்து தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முத்தலிக் கூறுகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இதற்குக் காரணம். வேண்டும் என்றே செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் முத்தலிக்.












Click it and Unblock the Notifications