கலைஞர் வீட்டு வசதி திட்ட விழா: ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை: திருச்சியில் நடைபெறவுள்ள 'கலைஞர் வீட்டு வசதி திட்ட' தொடங்க விழாவில் பங்கேற்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அமலாக்கப்படும் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசைகளி்ல் வசிக்கும் மக்களுக்கு 21 லட்சம் இலவச அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மார்ச் 3ம் தேதி நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி இத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், நாங்கள் எப்போதும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை உள்ளவர்கள். எப்போதும், நாங்கள் எதிர்க்கட்சிகளை புறக்கணிப்பதில்லை. கலைஞர் வீட்டு வசதி திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மிகப் பெரிய திட்டம்.
எனவே சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கு, இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருக்கிறேன். அதேபோல சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.
இதில் கம்யூனிஸ்டு கட்சிகள் அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொள்வதாக பதில் அனுப்பியுள்ளன.
ஆனால், ஜெயலலிதாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.
ஏற்கனவே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்பட்ட போதும் ஜெயலலிதா உள்ளிட்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications