மீண்டும் தெலுங்கானாவில் பந்த்-பல பகுதிகளில் வன்முறை
ஹைதராபாத்: தெலுங்கானா கமிட்டிக்குக் கண்டனம் தெரிவித்து தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு விடுத்த அழைப்பை ஏற்று இன்று காலையில் தெலுங்கானா பிராந்தியத்தில் பந்த் தொடங்கியுள்ளது. இதனால் தெலுங்கானா மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
தலைநகர் ஹைதராபாத் உள்பட பத்து மாவட்டங்களிலும் பந்த் நடத்தப்பட்டு வருகிறது. வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு பேருந்துகள் முழுமையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜக தொண்டர்கள் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள், வாகனங்களை மறிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
வாரங்கல், மேடக் மாவட்டங்களில் இது வன்முறையாக மாறியது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சிலர் தாக்கினர். பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத்தில் தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
பதட்டம் மிகுந்த ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகலில் மாணவர்களும், கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் 10 எம்.எல்.ஏக்களும் இன்று தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கவுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
இன்று மாலை மீண்டும் தெலுங்கானா போராட்டக் குழு கூடி அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவது குறித்து தீர்மானிக்கவுள்ளனர்.
ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு
இந்த நிலையில், தெலுங்கானாவில் வன்முறையை தடுக்க இன்று முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications