வாக்குப் பதிவு எந்திரம்: தேர்தல் ஆணையம் நிரூபிக்க ராமதாஸ் கோரிக்கை
தர்மபுரி: வாக்குப் பதிவு எந்திரத்தி்ல் முறைகேடு செய்ய முடியாது என்பதை வெளிநாட்டு நிபுணர்கள் முன்பு தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மின்னணு வாக்கு எந்திரங்களில் எந்த அளவு தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை செயல்முறை விளக்கங்களுடன் கூறி இருக்கிறார்கள்.
எனவே தேர்தல் கமிஷன் பன்னாட்டு நிபுணர்கள் முன்பு முன்னணு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு அவர் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் அடையாளச் சீட்டு வழங்க வேண்டும்.
பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தது மற்றும் இருப்பு தொடர்பாக வரும் ரசீது போல ஓட்டு போடும் எந்திர சீட்டின் மூலமே அந்த அடையாளச் சீட்டை வழங்க வேண்டும்.
பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்குப்பதிவை மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் ஓட்டுச்சீட்டு முறை என்ற இரண்டு முறையிலும் நடத்த வேண்டும். இரண்டு முறை மூலம் பதிவான ஓட்டுகள் சரியாக உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தேர்தல் ஆணைய விழா பொன் விழாவுக்கு எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பி இருந்தது. எங்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா விற்கு மட்டும் 2 கடிதங்கள் அனுப்பி தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு அழைத்து உள்ளனர். எனவே தேர்தல் கமிஷன் அனுப்பிய 2 கடிதங்களின் நகலை ஜெயலலிதா வெளியிடத் தயாரா?
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications