2010-11 பட்ஜெட்: தொழில்துறை சலுகைகள் சில வாபஸ்?

இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தொழில் துறையில் குறிப்பிடத்தக்க சாதக மாறுதல்கள் தெரிவதால், சில நிதிச் சலுகைகளை மட்டும் திரும்பப் பெறும் யோசனையில் உள்ளது மத்திய அரசு. இதுகுறித்து ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
சர்க்கரை, பருப்பு தானிய வகைகள், காய்கறி என அன்றாட தேவைக்கான அத்தனைப் பொருட்களின் விலையும் உச்சத்தை தொட்டிருப்பதால் நடுத்தர மற்றும் கீழ்நிலையில் உள்ள சராசரி மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இந்தநிலையில் மக்கள் வரவேற்கிற வகையில் ஒரு நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது உண்மையில் பெரும் சவாலான விஷயம் தான் என வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.
அதோடு எல்லா தரப்பு மக்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்திலும் அமைச்சர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில் மத்திய அரசு கட்டாயமாக கவர்ச்சி அறிவிப்புகளை பட்ஜெட்டில் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த பட்ஜெட்டை நேரடி வரி உயர்வு இல்லாத, வளர்ச்சிக்கான மற்றும் சலுகை திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வேலைக்கு செல்லும் சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பு பொதுவாக வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு குறித்ததாகவே உள்ளது. வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
அதேபோல், பெண்களுக்கு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரிவு 80சியின் படி முதலீட்டு பத்திரம், எல்ஐசி மற்றும் பரஸ்பர நிதி போன்றவைக்கு ரூ.2 லட்சம் வரை அனுமதிக்கவேண்டும் எனவும் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
சம்பளம் பெறுவோரின் வருமானத்தில் வரிக்கு உட்படாத மருத்துவ செலவினங்கள் தற்போது ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் என உள்ளது. தற்போதைய நடைமுறைக்கு முற்றிலும் முரணாக உள்ள இந்த தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
பிரின்ஜ் பெனிஃபிட் டாக்ஸ் எனப்படும் இதர சலுகைகள் மீதான வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அலுவலகம் மற்றும் வீட்டுக்கு இடையிலான போக்குவரத்து செலவு மாதத்துக்கு ரூ.800 வரை அனுமதிக்கப்படுகிறது. இதையும் உரிய வகையில் உயர்த்த வேண்டிய அவசியமுள்ளது.
தற்போது 65 வயதுடையவர்கள் மூத்த குடிமக்கள் பிரிவின் கீழ் வருகின்றனர். இன்றைய சமூக, இயற்கை மற்றும் மனித சமுதாய ஆரோக்கிய நிலையை கருத்தில் கொண்டு இந்த வயதை 60ஆக குறைக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.
அதேபோல், வரி செலுத்தும் நடைமுறைகளை முழுக்க முழுக்க இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு வருமான வரித்துறை நிதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பான் கார்டு வழங்கல், வருமான வரி தாக்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு காகிதமில்லாத நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலம் பணிகள் விரைவாகவும், துல்லியமாக நடந்துமுடியும்.
அதோடு கார்பன் மாசு கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இதை அணுகலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications