சென்னை உயர்நீதிமன்றம்- 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக கே.பி.கே. வாசுகி, ஆறுமுகச்சாமி, மதிவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று மூன்று நீதிபதிகளும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி ஆறுமுகச்சாமி நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்தைச் சேர்ந்தவர். இப்பதவிக்கு வரும் முன்பு அவர் சென்னை உயர்நீதி்மன்ற பதிவாளர் ஜெனரலாக இருந்து வந்தார்.
நீதிபதி கே.பி.கே.வாசுகி ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்தவர்.
மூத்த வழக்கறிஞர் காந்தியிடம் ஜூனியராக இருந்தவர். பின்னர் 1986ம் ஆண்டு மாவட்ட முன்சீப் ஆக பதவியேற்றார். அப்போது நியமிக்கப்பட்ட 56 முன்சீப்களில் இவர் மட்டுமே பெண் ஆவார்.
1998ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளராக இருந்தார்.
இவர் மறைந்த பழம்பெரும் பாடகி, நடிகையான கே.பி.சுந்தராம்பாளின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதது.
நீதிபதி மதிவாணன், நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருமல் கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் உறுப்பினர் செயலாளராக இருந்து வந்தார்.
புதிதாக பதவியேற்றுள்ள 3 நீதிபதிகளையும் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 காலியிடங்கள் உள்ளன.
மேலும் உயர்நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications