3 ஜி ஏலத் தேதி...'இன்னும் முடிவு செய்யல'!-ராசா
டெல்லி: மூன்றாம் தலைமுறைக்கான ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகள் 3-ஜி ஏலத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய தொலைத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
ஏல விற்பனை தொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகத்திடமிருந்து உரிய வழிகாட்டுதல் வரவில்லை. அதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
3 ஜி ஏலம் இந்த நிதியாண்டில் நடக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராசா கூறுகையில், 'ஏல விற்பனை இந்த நிதி ஆண்டில் நடைபெறுமா? அல்லது அடுத்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படுமா? என்பது விஷயம் அல்ல. தொலைத் தகவல் தொடர்புத்துறை, நிதி அமைச்சகம்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்..." என்றார்.
3-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அதிகாரக் குழுவின் தலைவரான மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த விற்பனை மூலம் ரூ. 35 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
3-ஜி ஏல விற்பனை மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைக்கவே இந்த அளவு விலை நிர்ணயித்திருப்பதாகத் தெரிகிறது.
இன்னொரு பக்கம் 3 ஜி ஏலத்துக்குப் பொறுப்பான அமைச்சகங்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததே 3-ஜி ஏலம் தள்ளிப் போவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு போட்டியாளர்களை அனுமதிக்கலாம் என்பதில் நிதி அமைச்சகத்துக்கும் தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சகமும் இன்னும் இந்த ஏலத்துக்கு ஒப்புதல் தரவில்லை.












Click it and Unblock the Notifications