தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்
காஞ்சீபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள மச்சேசப்பெருமாள் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன். இவர் கோவில் உள்ளே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அவர் மீது வழக்கு பதிவு செய்தார். கோர்ட்டில் சரண் அடைந்த தேவநாதனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணையை தொடர்ந்தார்.
இந்நிலையில் தேவநாதன் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் திடீரென வேலூர் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது போல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை கூடுதலாக மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கவனித்து வருகிறார். தாலுகா இன்ஸ்பெக்டராக சம்பத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.