ராகுல் பாணியில் தலித் வீட்டில் சாப்பிட்ட பாஜக தலைவர் கத்காரி

உ.பி. மாநிலத்திற்கு அவ்வப்போது விசிட் அடிக்கும்போது தடாலடியாக யாராவது ஒரு தலித்தின் வீட்டுக்குச் செல்லும் ராகுல் காந்தி அங்கு சாப்பிட்டு விட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் ராகுல் பாணியை அப்படியே காப்பி அடித்து தலித் ஒருவரின் வீட்டுக்குப் போய் சாப்பிட்டார் பாஜக தலைவரான நிதின் கத்காரி.
இந்தூரில் 3 நாள் பாஜக தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது. இதற்காக அங்கு பாஜக தலைவர்கள் குவிந்துள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றே இந்தூர் வந்து விட்டார் கத்காரி. நேற்று மோ என்ற இடத்திற்கு அவர் சென்றார். இந்தக் கிராமத்தில்தான் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோ கிராமத்திற்குச் சென்ற கத்காரி, அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் உள்ளூர் பாஜக கவுன்சிலரான பிரீத்தி கரோசியாவின் வீட்டுக்குச் சென்றார். இவர் வால்மீகி என்ற தலித் வகுப்பைச் சேர்ந்தவர். பிரீத்தியின் வீட்டில் கத்காரி மதிய உணவை சாப்பிட்டார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், சமூகத்தின் பிற நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பாஜக தீவிரமாக பாடுபட வேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருபவர் கத்காரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலித் பிரமுகரின் வீட்டுக்கு சாப்பிட்டு பாஜகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் தலித்களின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் கத்காரி.
முன்பு உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்களின் வீடுகளில் ராகுல் காந்தி தங்கி உணவருந்தியபோது அதை பாஜக ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம் என விமர்சித்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications