போலீஸ் 'என்கெளண்டர்': கருணாநிதி கவலை
சென்னை: போலீஸ் என்கெளண்ட்டர் சம்பவங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகளின் கவலையில் தானும் பங்கு கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள், பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநாட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 21 குழுக்களின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
செம்மொழி மாநாடு நடைபெற உள்ள கோவை மாநகரில் உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.59.85 கோடியும், செம்மொழி பூங்கா அமைக்க ரூ.20 கோடியும், மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரப் பணிக்கு ரூ.10 கோடியும், மின் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.56 கோடியும், சாலை மேம்பாடு உள்ளிட்ட உட்கட்டமைப்புக்கு ரூ.104.40 கோடியும், கொடீசியா உள் அரங்கப் பணிக்கு ரூ.9.30 கோடியும், மாநாட்டு பந்தல் பணிக்கு ரூ.7.71 கோடியும், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகளுக்கு ரூ.5.85 கோடியும், கண்காட்சி அமைக்கும் பணிக்கு ரூ.1.60 கோடியும், விருந்தோம்பலுக்கு ரூ.4.95 கோடியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மேம்பாட்டுக்கு ரூ.4.25 கோடியும், மருத்துவ வசதி, சிறப்பு மலர் மற்றும் போக்குவரத்து வசதிக்கு ரூ.10.85 கோடி என ஏறத்தாழ் 300 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு குழுக்களின் செயல்பாடு எப்படியுள்ளது?
பதில்: ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கான பணிகளை எவ்வாறு ஆற்றி வருகிறோம் எனச் சொன்னார்கள். அவர்களின் பணி திருப்திகரமாக இருக்கிறது.
டெல்லியில் பிரதமரை அதிமுக எம்.பிக்கள் சந்தித்து கரும்பு விலை சம்பந்தமாக கோரிக்கை வைத்திருக்கிறார்களே?
பதில்: அவர்களுக்கு அது 'கரும்பான செய்தியாக' இருக்கலாம். எங்களுக்கு அதைப் பற்றிய விவரம் தெரியவில்லை.
மாநாட்டுக்கு யார் யார் வருகிறார்கள்?
பதில்: மாநாட்டுத் தொடக்க விழாவுக்கு குடியரசுத் தலைவர் வருகிறார். மொழியியல் அறிஞர்கள், அனைத்துக் கட்சியினர் அழைக்கப்படுவார்கள்.
வெளிநாட்டினர் வருவதற்கான விசா போன்ற அனுமதிகள் பெற்றுத் தர மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளதா?
பதில்: அதற்கான ஏற்பாடுகளைத் தலைமைச் செயலாளர் செய்து வருகிறார்.
புதிய சட்டப் பேரவை வளாகப் பணிகள் எந்த அளவில் உள்ளன?
பதில்: மார்ச் 13ம் தேதி தொடக்க விழா நடைபெறுகிற அளவுக்கு பிரதமரும், சோனியா காந்தியும் கலந்து கொள்கிற அளவுக்கு சட்டப் பேரவை பணிகள் நிறைவடைந்து வருகின்றன.
போலீஸ் என்கெளண்ட்டர் கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளார்களே?
பதில்: அவர்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications