ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்-கட்கரி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் அக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய அவர் கூறுகையில்,
ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியில் நிலத்தை முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தால் அருகில் பெரிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.
அங்கு கோவில் கட்டிய பிறகு மற்றொரு பகுதியில் போதுமான நிலம் இருந்தால் அதில் மசூதி கட்டிக் கொள்ளலாம்.
அயோத்தியில் மாபெரும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டால் ஒருவர் வெற்றி பெறுவதும் மற்றொருவர் தோற்பதும் உறுதி. அது தேவையில்லை.
பாஜக முஸ்லீம்களுக்கு எதிரான கட்சி என்பது தவறான கருத்து. முஸ்லீம்களுக்கு எதிரான கட்சியாக இருந்தால் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியிருப்பார்களா?.
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழவேண்டும். இவர்களில் யார் பின்தங்கினாலும் நாடு முன்னேற்றம் காண முடியாது.
ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் முஸ்லீம் சமூகத்தினர் ஒருமனதாக முடிவெடுத்து கோயில் கட்டுவதற்கு உதவினால் அது இந்து-முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்.
ஆந்திராவில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்காள அரசின் இந்த முடிவும் நீதிமன்ற விசாரணையில் செல்லுபடியாகாமல் போய்விடும். எனவே முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக முடிவு எடுப்பதை அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருதுகிறேன்.
2014ம் ஆண்டு நாடாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் நாம் செயல்பட வேண்டும்.
பாஜக ஆட்சியைப் பிடிக்க 10 சதவீத வாக்குகளே கூடுதலாகத் தேவை. அதை அடைய தொண்டர்களை முடுக்கி விட வேண்டும்.
தங்களது குறைகளை தீர்த்துவைப்போர் இல்லையா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே தொண்டர்கள் மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் அம்பேத்கர். உண்மையான மனித நேயர் அவர். அவரது வாழ்க்கை சமூக நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு குறிப்பாக தலித் மக்களுக்கும் ஆற்றிய சேவை அளவிட முடியாதது. அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையானவர் அம்பேத்கர்.
தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவிலிருந்து மீள வேண்டுமானால் நாம் புதிய பணி கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். கட்சியில் ஒழுக்கமும் பரஸ்பர நம்பிக்கையும் நிலவுவது மிகவும் அவசியம் ஆகும். கட்சிக்கு விசுவாசத்துடன் உண்மையாக பாடுபடுபவர்களுக்கு உரிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதற்கு நானே ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறேன்.ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதேநேரத்தில் ஒழுங்கீனமாக நடந்தால்,அதை கட்சி பொறுத்துக் கொள்ளாது.
பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் நிர்வாகம் சிறப்பாக இருப்பதும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு விவசாய துறை 14 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. அதே போல பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக அமலாக்கப்படுகின்றன. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலம் 11 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.
அம்பேத்கருக்கு பாஜக திடீர் புகழாரம்:
மேலும் தனது பேச்சின் இடையே அண்ணல் அம்பேத்கரையும் கட்காரி புகழ்ந்து பேசினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் அம்பேத்கர். உண்மையான மனிதநேயர். அவரது வாழ்க்கை சமூக நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது என்று கூறிய கட்காரி, அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங்குடன் அம்பேத்கரை ஒப்பிட்டுப் பேசினார்.
முன்னதாக இந்தூரில் அம்பேத்கரின் பிறந்த இடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியதோடு தலித் ஒருவரின் வீட்டில் உணவும் அருந்தினார் கட்காரி என்பது குறிப்பிடத்தக்கது.
கத்காரியின் பேச்சுக்கு பாஜக விளக்கம்:
ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் உதவ வேண்டும் என்ற கத்காரியின் பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் உதவினால், பாபர் மசூதியை பொருத்தமான இடத்தில் கட்ட பாஜக உதவும் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி பேசியிருந்தார்.
இதைப் பரிசீலிக்கவும், சம்மதிக்கவும் முஸ்லீம் சமுதாயத்தினர் முன்வந்தால், ராமர் கோவில் குழுக்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் பொருத்தமான இடத்தில் பாபர் மசூதியைக் கட்டித் தர பாஜக நடவடிக்கை எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications