நில மோசடி: ஜேபிஜே நிறுவன மேலாளரும் பெங்களூரில் சிக்கினார்
சென்னை: ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்ட ஜே.பி.ஜே நிறுவனத்தின் மேலாளர் பெங்களூர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை தமிழக போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது நில மோசடி புகார்கள் எழுந்தன.
கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து விட்டு, பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு நிலங்களை விற்காமலும், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, தலைமறைவான அந்நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாசை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர். பல நாட்களாக பிடிபடாமல் இருந்த அவரின் மனைவி பெல்லா ஜஸ்டினையும் போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜே.பி.ஜே. நிறுவனம் பெங்களூரிலும் நில மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் ரூ. 20 கோடி அளவுக்கும், பெங்களூரில் ரூ. 7 கோடி அளவுக்கு மேலும் மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து ஜே.பி.ஜே. நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு போலீசார் வலை விரித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தலைமறைவு ஆகிவிட்டார்கள்.
இந்நிலையில் ஜே.பி.ஜே.யின் இயக்குனராக செயல்பட்ட மணிவண்ணன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இந்திரா நகர் போலீஸ் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications