ரயில்வே பட்ஜெட்- பயணிகள் கட்டணம் உயர வாய்ப்பில்லை - ரயில்வேவுக்காக டிவி சானல் அறிமுகம்
டெல்லி: வருகிற 24ம் தேதி மமதா பானர்ஜி தாக்கல் செய்யவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில்வே துறைக்காக தனி டிவி சேனல் ஒன்றை மமதா அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வருகிற 24ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மமதா தாக்கல் செய்யும் 2வது ரயில்வே பட்ஜெட் இது.
இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் கட்டணத்தை மமதா உயர்த்த மாட்டார் என்று நம்பப்படுகிறது. அதேசமயம், சரக்குக் கட்டணத்தையும் அவர் முறைப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண பயணிகள் கட்டணம் குறைக்கப்படாவிட்டாலும் கூட, குளிர்சாதனப் பெட்டிகளுக்கான கட்டணத்தில் லேசான உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ரயில்வேயின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ரயில்வே வாரியம் வலியுறுத்தியுள்ளதாம். இருப்பினும் பயணிகள் கட்டணத்தை குறிப்பாக சாதாரண மக்கள் அதிகம் பயணிக்கும் 2ம் வகுப்பு கட்டணத்தை நிச்சயம் மமதா உயர்த்த மாட்டார் எனக் கூறப்படுகிறது.
சரக்குக் கட்டணத்தைப் பொறுத்தவரை, இரும்பு, நிலக்கரி, தாதுப் பொருட்களுக்கான சரக்குக் கட்டணம் 5 முதல் 10 சதவீத உயர்வைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிவி சேனல்..
இதேபோல பட்ஜெட்டில் இடம் பெறும் என நம்பப்படும் இன்னொரு முக்கிய அம்சம் ரயில்வே துறைக்காக தனி டிவி சேனல்.
தற்போது லோக்சபா, ராஜ்யசபாவுக்கென்று தனித் தனியாக சேனல்கள் உள்ளன. அந்த வரிசையில் ரயில்வே துறைக்கென தனி டிவி சானல் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் தாக்கலின்போது மமதா வெளியிடுவார் எனத் தெரிகிறது.
இந்த சேனலின் தலைமையகம் மமதா பானர்ஜியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் அமையும் என்று தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த சேனலுக்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த சேனலின் தலைவராக திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவபிரசன்னா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. உண்மையில் இவரது தலைமையிலான குழுதான், சேனல் ஆரம்பிக்கலாம் என்று ரயில்வேத் துறைக்குப் பரிந்துரை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவபிரசன்னா மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சிங்கூர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கலைஞர் ஆவார். இவர் தலைமையில் ஏராளமான கலைஞர்கள், அப்போது மமதாவுக்கு தோள் கொடுத்து போராடினர். பின்னர் சிங்கூர் போராட்டம் முடிவுக்கு வந்ததும் சுவபிரசன்னா தலைமையில் பல கலைஞர்கள் மமதா கட்சியில் சேர்ந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications