போலீஸ் அடித்ததாக வக்கீல்கள் புகார்-போலி எஸ்.பி. சாருலதாவுக்கு மருத்துவ சோதனை

போலீஸ் பயிற்சி அகாடமி எஸ்.பி. என்று கூறிக் கொண்டு சென்னை நகர போலீஸாரை ஏமாற்றியதாக பிடிபட்டுள்ளார் சாருலதா. போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு பல இளைஞர்களிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணத்தையும் சுருட்டியுள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாருலதாவை நேற்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினார். நீதிபதி முன்பு ஆஜரானா சாருலதா தரையில் அமரப் போனார். இதைப் பார்த்த நீதிபதி பெஞ்சில் அமருமாறு கூறவே, என்னால் பெஞ்சில் அமர முடியாது என்றார் சாருலதா.
அப்போது சாருலதாவின் வக்கீல்கள், போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சாருலதாவால் நடக்கக் கூட முடியவில்லை. எனவே, அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்று கோரினர்.
அதற்கு அரசு வக்கீல் குறுக்கிட்டு, சாருலதாவால் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவரிடம், விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சாருலதாவுக்கு முழு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். அந்த பரிசோதனை அறிக்கையை நாளை (இன்று) கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே, சாருலதாவை போலீஸ் காவலில் விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து ராயபுரம் மருத்துவமனைக்கு சாருலதா அழைத்துச் செல்லப்பட்டார். இன்று மருத்துவப் பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து சாருலதாவை போலீஸ் காவலில் விடுவதா, இல்லையா என்பதை கோர்ட் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications