சோமாலியா கொள்ளையர் பிடியிலிருந்து மீண்டு வந்த 2 தமிழர்களின் திகில் அனுபவங்கள்
தூத்துக்குடி: சோமாலியாக் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கி 110 நாட்கள் சிறை வைக்கப்பட்டு மீண்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இரு மாலுமிகள் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.
சோமாலியாக் கொள்ளையர்கள் பணத்தையே குறிக்கோளாக கொண்டு ஆட்களை கடத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கொள்ளையர்களின் பிடியில் 110 நாள் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாலுமிகள் விஜயகணேஷ், மாணிக்கம் ஆகியோர் மீண்டு வந்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அல் காலித் கப்பல் தென்னாப்பிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு கோதுமை ஏற்றிச் சென்றது. கடந்தாண்டு அக். 22ம் தேதி செசல்ஸ் தீவு அருகே நடுக்கடலில் கப்பல் சென்றபோது துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் அதை மடக்கி கொண்டு சென்றனர்.
அக்கப்பலில் விஜயகணேஷ், மாணிக்கம் உள்ளிட்ட 24 இந்தியர்கள் உள்பட 26 பேர் இருந்தனர். 26 பேரையும் சிறைப் பிடித்த கொள்ளையர்கள் ரகசிய இடத்திற்குக் கொண்டு போய் வைத்தனர்.
விஜயகணேஷ் தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர். மாணிக்கம், சங்கரன்கோவில், வேலப்ப நாடாரூர் பகுதியைச் சேர்ந்தவர்.
கொள்ளையர்களுடன், தனியார் கப்பல் நிறுவனம் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, அந்த நிறுவனம் பெரும் தொகையைக் கொடுத்த பின்னர் பிப். 7ம் தேதி கொள்ளையர்கள் அனைவரையும் விடுவித்தனர்.
அதனையடுத்து, விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து தனியார் விமானத்தில் நேற்று மதியம் 12.15 மணிக்கு விஜயகணேஷ், மாணிக்கம் ஆகியோர் தூத்துக்குடி, வாகைகுளம் விமான நிலையம் வந்தனர்.
அவர்களை பெற்றோர், குடும்பத்தினரும் ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றனர். அங்கு இருவரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொள்ளையர்களுக்கு பணம் தான் குறிக்கோளாக உள்ளது. இதற்காகவே வெளிநாட்டுக் கப்பல்களை மடக்கி சிறைப் பிடிக்கிறார்கள். அவர்கள் வசம் கிட்டத்தட்ட 25 கப்பல்கள் உள்ளன.
எங்கள் கப்பல் சோமாலியா அருகே சென்று கொண்டு இருந்த போது, படகுகளில் வந்த கொள்ளையர்கள் திடீரென எங்கள் கப்பலை கடத்தி சென்றனர். அவர்கள் சோமாலியா அருகே உள்ள ஒரு இடத்தில் கப்பலை நிறுத்தி வைத்தனர். எங்களை கப்பலை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை. சாப்பிடுவதற்கும், பாத்ரூம் செல்வதற்கும் மட்டுமே அறையை விட்டு வெளியில் வர அனுமதித்தனர்.
இரவு பகலாக கொள்ளையர்கள் கப்பலில் காவல் இருந்தனர். நாங்கள் கப்பலில் வைத்து இருந்த உணவை சாப்பிட்டு கொண்டோம். 3 தடவை எங்களை வீட்டுக்கு பேச அனுமதித்தனர். இது போன்ற சம்பவம் யாருக்கும் இனி நடக்க கூடாது என்றனர்.












Click it and Unblock the Notifications