புனே விபச்சார கும்பல்-காப்பாற்ற கோரும் அரவாணி
சென்னை: தன்னை கடத்தி வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் அரவாணி புகார் அளித்துள்ளார்.
சென்னை பொழிச்சலூரை சேர்ந்த அரவாணி ஜோதிகா (எ) ராஜசேகரன் (25) புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகார் வருமாறு:
குருசாமி-ஆவுடைதங்கம் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன். எனக்கு புனிதா என்ற அக்காவும், சரவணக்குமரன் என்ற அண்ணனும் உள்ளனர்.
எட்டாவது வகுப்பு வரை திருவேற்காட்டில் உள்ள மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆண்கள் விடுதியில் தங்கி, வேலப்பன் சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் படித்தேன்.
14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, எனது உடலில் பருவமாற்றத்தை உணர்ந்தேன். நடை, உடை பாவனைகள் பெண் தன்மையுடன் மாற ஆரம்பித்தது.
இந்த சமயத்தில் எங்கள் பகுதிக்கு பிச்சையெடுக்க வரும் திருநங்கைகள் பிரியா, பூஜா, ஆயிஷா, வேல்விழி, மோனல், ரேஷ்மா மற்றும் நிரோஷா ஆகியோர் என்னை அணுகினர்.
இவர்கள் நுங்கம்பாக்கத்தில் வசிக்கின்றனர். இவர்கள், நான் பெண் போன்று இருப்பதாகவும், அழகாக இருப்பதாகவும் ஆசையோடு பேசினர்.
கடந்த 1999ம் ஆண்டு அவர்கள் வசிக்கும் நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு எனக்கு பெண் உடை அணிவித்து, அழகு பார்த்தனர்.
மூன்று வாரங்கள் அங்கேயே தங்க வைத்து, பிச்சை எடுக்க அவர்களுடன் அழைத்து சென்றனர்.
பின், புனேவிற்கு அழைத்து சென்ற அவர்கள், அங்கு வைத்து என்னை வடமாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு விற்றனர்.
அவர்கள் என்னை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
என்னுடைய சம்மதம் இல்லாமல் 2001ம் ஆண்டு கடப்பாவுக்கு அழைத்து சென்று, நாகண்ணா என்ற மருத்துவரிடம் ஆண் உறுப்பை அகற்றினர்.
புனேவில் 40 நாட்கள் சடங்கு முடிந்ததும், பாலியல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தனர்.
ஒத்துழைக்க மறுத்தால் அடி, உதை மற்றும் சூடு போட்டனர். கடந்த 2005ம் ஆண்டு, ஒரு வாடிக்கையாளர் மூலமாக தப்பித்து சென்னை வந்து, தோழியர் வசிக்கும் நடராஜபுரம் மாமண்டூரில் தஞ்சமடைந்தேன்.
இதையறிந்த அக்கும்பல் நான் பிச்சையெடுக்கும்போது மீண்டும் புனேவுக்கு கடத்தி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தப்பித்து தமிழகம் வந்தேன். என் தந்தை வீட்டிற்கு சென்றேன். அவர்களும் என்னை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதையறிந்த திருநங்கை கும்பல் என்னை மீண்டும் கடத்தி, விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது. இதனால், ஆறு மாதங்களாக பதுங்கி, ஓவ்வொரு இடமாக அலைந்து வருகிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன் தி.நகருக்கு சென்றுவிட்டு, பரங்கிமலைக்கு ரயிலில் திரும்பினேன்.
அப்போது, என்னை வழிமறித்த திருநங்கை கும்பல், மொபைல்போன் மற்றும் மூன்று சவரன் செயினை அடித்து பிடுங்கி, ஆட்டோவில் கடத்த முயன்றது.
ஆகவே, அக்கும்பலால் மீண்டும் கடத்தப்படும் அபாயமும், என் உயிருக்கும் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையும் உள்ளது.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், என்னை போன்று ஏராளமான குழந்தைகளை மும்பைக்கு கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதையும் தடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இப்புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கும்படி காவல்துறை ஆணையர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications