முல்லைப் பெரியாறு: ஐவர் குழுவை ஏற்க முடியாது-திமுக பொதுக் குழு தீர்மானம்
சென்னை:

இந்தக் குழுவில் தமிழ்கத்தில் சார்பில் யாரும் இடம் பெறத் தேவையில்லை என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் நடந்தன.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டங்களில் மத்திய, மாநில அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு- செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதில் தமிழக, தேசிய அரசியல் நிலவரம், மாநில அரசின் செயல்பாடு, திட்டப் பணிகள் அமலாக்கம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவதாக முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம்: முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற் கட்டமாக தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை நீரை தேக்கிக் கொள்ளலாம் என்றும், உச்ச நீதிமன்றம் 27.2.2006 தேதியன்று அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பையே மறுத்து கேரள அரசு ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. இதனை சுட்டிக்காட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வகையில் கேரள அரசு நிறைவேற்றிய திருத்த சட்டத்திற்கு உடன்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தமிழக அரசின் வழக்கையே திசை திருப்பி மீண்டும் ஒரு ஆய்வு நடத்துவோம் என ஐவர் குழுவை தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்து இருப்பதை நாம் மறுக்காவிட்டாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.
காரணம், இந்த பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் சார்பிலும் 7 பேர் கொண்ட மிட்டல் குழுவின் சார்பிலும் அணை வலுவாக உள்ளது என்று ஏற்கனவே எடுத்து வைத்து இருக்கும் உண்மையை மீண்டும் திரும்ப திரும்ப எடுத்துரைக்கும் வகையில் இந்த ஐவர் குழுவில் தமிழ்நாடு அரசின் சார்பில் இடம் பெற தேவையில்லை என இப் பொதுக் குழு தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு:
மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், முகாம்களி்ல் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை ஏவிவிடும் வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான முடிவினை ஏற்படுத்திடும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சேது சமுத்திரத் திட்டம்:
அதே போல சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications