அத்வானியின் ராகுல் கவலை!-கட்சியினருக்கு அறிவுரை!!

இந்தூரில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவுரையாற்றிய அவர் கூறுகையில்,
சாமானிய மக்களால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இப்போது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய தோல்வியை தழுவும். ஏனென்றால் அந்த கட்சி தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு விலைவாசி உயர்ந்து மக்களை அழுத்திக் கொண்டிருக்கிறது.
விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள், இல்லையென்றால் ஆட்சியை விட்டு கீழே இறங்குங்கள்.
பாஜகவில் ஒற்றுமை இல்லை, தலைவர்கள் சண்டை போடுகிறார்கள், இவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்ல நிர்வாகத்தைத் தர மாட்டார்கள் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். நம் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பூசல் பகிரங்கமாக வெளிப்பட்டதால் நம் ஆதரவாளர்களும் கட்சித் தொண்டர்களும் மனம் சோர்ந்தார்கள். அதனால் தான் கடந்த மக்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தோற்றோம்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும் நம் தலைவர்களின் ஒற்றுமைக் குறைவால் பாஜகவால் நிலையான அரசைத் தர முடியாதோ என்று மக்கள் சந்தேகப்பட்டார்கள். அதனால் தான் காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் வாக்களித்தார்கள்.
இனி எதிர்காலத்தில் இப்படி நடக்கக் கூடாது. நம் கட்சி பிற அரசியல் கட்சிகளைவிட வித்தியாசமானது என்றோம். அதை நிலைநாட்ட ஒற்றுமையும் ஒழுக்கமான நடத்தையும் அவசியம்.
இப்போது தனியாகவும் கூட்டணியாகவும் நாம் ஆளும் மாநிலங்களில் ஏழைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவம் திட்டங்களில் தான் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகாம் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லா மாநிலங்களிலும் பாஜக அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்தலில் தோற்பதும் வெற்றி பெறுவதும் ஜனநாயகத்தின் ஒரு அம்சம் தான். தோற்றுவிட்டோம் என்பதற்காக நாம் மூலையில் முடங்கிவிடக் கூடாது. பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோம்.
சில மாநிலங்களில் நமக்கிருந்த ஆதரவு சரிந்திருக்கிறது. சிலவற்றில் ஆதரவு அறவே இல்லை. இதனால் நம்மால் சரியான அரசியல் உத்தியை வகுக்க முடியாமல் போனது.
காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில் ராகுல் காந்தியை அந்தக் கட்சி மையமாக வைத்துக் கொண்டுள்ளது. நம்முடைய கட்சியிலும் ராகுல் காந்திக்கு சவால்விடக்கூடிய வகையில் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும்.
காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அப்படி ஏதாவது தனி அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முயற்சி எடுக்குமானால் பெரிய அரசியல் போரையே சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றார் அத்வானி.
ஏப்ரல் 21ல் நாடாளுமன்ற முற்றுகை:
முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வரலாறு காணாத விலை உயர்வைக் கண்டித்து வரும் ஏப்ரல் 21ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி 5 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் அளிக்கப்படும்.
யூக வணிகத்தால் மத்திய அமைச்சர்கள் லாபம் அடைந்து வருவதால் தான் விலைகள் உயர்ந்துள்ளன. விலை உயர்வுக்கு நிர்வாகத் திறமையின்மை, முன்கூட்டியே யோசித்து முடிவெடிக்கும் தலைமை இல்லாதது போன்ற காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக எல்லா நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவது முக்கிய காரணம்.
காஷ்மீருக்கு சுய அதிகாரம் வழங்குவதை கடுமையாக எதிர்க்கிறோம். அதுபோல் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
முன்னதாக மக்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார நிபுணராக இருப்பதால்தான் விலைகள் உயர்ந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை என்று கிண்டலடித்தார்.












Click it and Unblock the Notifications