பஞ்சாப் - பயங்கர ஆயுதங்களுடன் 12 சீக்கியர்கள் கைது
பாட்டியாலா: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காலி்ஸ்தான் அமைப்பைச் சேர்ந்த 12 சீக்கியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் காலிஸ்தான் அமைப்பு ஒடுக்கப்பட்டது. அதன் பின்னர் பஞ்சாபில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கும் வந்தது. பஞ்சாபில் நீண்ட காலமாக நடந்து வந்த ஆயுதப் போராட்டத்தை முடித்து வைத்த பெருமை அப்போதைய டிஜிபி கேபிஎஸ் கில்லையே சேரும்.
இந்த நிலையில், பாட்டியாலாவில் 12 சீக்கியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர். இவர்கள் தனி நாடு கோரி வந்த காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மர்ம மனிதர்கள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து அங்கு இருந்த அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் வெடி குண்டு, வெடிமருந்து, மற்றும் பல்வேறு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தனர். அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
அங்கு மொத்தம் 12 பேர் பிடிபட்டனர்.
காலி்ஸ்தான் அமைப்பு தற்போது பஞ்சாபில் செயல்பாட்டில் இல்லை என்ற போதிலும் இன்னும் அதன் செயல்பாடுகள் மறைமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆயுதங்களுடன் சீக்கியர்கள் 12 பேர் பிடிபட்டிருப்பது மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கி விடுமோ என்ற அச்சமும் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்திரா காந்தி கொலையுண்ட சமயத்தில் டெல்லியில் சீக்கியர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவத்தில் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
குறிப்பாக ஜெகதீஷ் டைட்லர், சஜன் குமார் உள்ளிட்டோர் மீதுதான் தாக்குதலை ஏவி விட்டு நடத்தியதாக அழுத்தமான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுள்ளனர்.
இது சீக்கியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அதேபோல சமீபத்தில் இந்திரா காந்தியைக் கொலை செய்த பியாந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்ட மூன்று பேரின் படங்களுக்கு நியூசிலாந்தில் உள்ள குருத்வாராவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஆயுதங்களுடன் சீக்கியர்கள் பிடிபட்டிருப்பது பாதுகாப்புப் படையினரை பல்வேறு ஊகங்களுக்கு இட்டுச் செல்வதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications