தேசிய ஜனநாயக கூட்டணி: வாஜ்பாய் 'நாற்காலியில்' அத்வானி!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பதிலாக அத்வானியை நியமித்துள்ளது பாஜக.
வாஜ்பாய் உடல்நலம் பெற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பும்வரை இந்தப் பதவியில் அத்வானி நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கூட்டணியின் செயல் தலைவர் பதவிக்கு அத்வானியின் பெயரை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் முன்மொழிந்தார்.
இதை பாஜக தலைவர் நிதின் கட்காரி, சிவசேனைத் தலைவர் மனோகர் ஜோஷி, சிரோமணி அகாலி தளம் தலைவர் நரேஷ் குஜ்ரால் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாஜக மூத்தத் தலைவர் வாஜ்பாய் உடல்நலம் பெற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பும்வரை இப்பதவியில் அத்வானி நீடிப்பாராம்.
இதையடுத்து கூட்டணியின் அமைப்பாளர் பதவிக்கு சரத் யாதவின் பெயரை பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தார். இதை நிதின் கட்காரி, மனோகர் ஜோஷி, நரேஷ் குஜ்ரால் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து சரத் யாதவ் அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 18 கட்சிகள் இடம் பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இப்போது பேர் சொல்லிக் கொள்ளும் வகையில் 4 கட்சிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவியை ராஜினாமா செய்தார் வசுந்தரா:
இந் நிலையில் ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த வசுந்தரா ராஜே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்தார்.
ராஜஸ்தானில் கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆனால் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதே நேரத்தில் தேசிய அளவிலான தோல்விக்கு பொறுப்பேற்று ராஜ்நாத் சிங், அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் எந்தப் பொறுப்புகளில் இருந்தும் விலகாததால் தான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும் என்று கேட்டு வந்தார் வசுந்தரா.
மேலும் அவருக்கு பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் ஆதரவு அளித்ததால் கட்சிக்குள் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் இன்று திடீரென்று ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த வசுந்தரா ராஜே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications