போலீஸ் மீது கல்வீச்சு- தூசி தட்டப்படும் பழைய வழக்கு - சிக்கலில் ராஜ் பாபர்
டெல்லி: போலீஸார் மீது நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக நடிகரும், காங்கிரஸ் எம்.பியுமான ராஜ் பாபர் மீது டெல்லி போலீஸார் கடந்த 2000மாவது ஆண்டு தொடர்ந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து காங்கிரஸுக்குத் தாவியவர் ராஜ் பாபர். சமீபத்தில் உ.பியில் நடந்த லோக்சபா இடைத் தேர்தலில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து முலாயம் சிங் யாதவின் மருமகள் இறக்கப்பட்டார். ஆனால் காங்கிரஸ் சார்பில் நின்ற ராஜ் பாபர் வெற்றி பெற்று விட்டார்.
இந்த நிலையில், கடந்த 2000மாவது ஆண்டு நடந்த சம்பவத்தில் ராஜ் பாபர் மீது டெல்லி கோர்ட் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.
அப்போது ஆக்ரா எம்.பியாக இருந்தார் ராஜ் பாபர். அவரும், சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அமர்சிங், எம்.பி. சர்வராஜ் சிங் உள்ளிட்ட 1000 பேர் அப்போதைய பிரதமர் வீட்டின் முன்பு தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக மறியல் செய்தனர்.
அப்போது போலீஸார் மீது சமாஜ்வாடிக் கட்சியினர் கல்வீசித் தாக்கினர்.
இதையடுத்து ராஜ் பாபர், அமர்சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த வாரம் ராஜ் பாபர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவது தொடங்கும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து கடந்த 2004ம் ஆண்டே அமர்சிங் கழற்றப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலகத்தை ஏற்படுத்தல், காயப்படுத்துதல், போலீஸாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜ் பாபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications