இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- 5 பேர் கொண்ட பாக். குழு வருகிறது
டெல்லி: இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு டெல்லி வரவுள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானிலிருந்து பஷீர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு டெல்லி வருகிறது. பாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித்தும் இடம் பெறுகிறார்.
ஒரு நாளைக்கு முன்னதாக டெல்லி வரும் பாகிஸ்தான் குழு 26ம் தேதி பாகிஸ்தான் கிளம்பிச் செல்லும்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை விடப்படுமா அல்லது இரு நாடுகளின் வெளியுறவுத்துறைச் செயலாளர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திப்பார்களா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இரு தரப்பும் தனித் தனியாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் குழு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்திக்கும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இதுதொடர்பாக கிருஷ்ணாவிடம் பாகிஸ்தான் தரப்பு நேரம் எதுவும் இதுவரை கேட்கவில்லை.












Click it and Unblock the Notifications