பிடிக்க முடியாத குட்ரோச்சிக்காக செலவழிக்கப்பட்ட பணம் ரூ.40 லட்சம்!

பல குற்ற வழக்குகள், அரசியல் வழக்குகளாக மாறி, லட்சம் கோடிகளில் பணத்தை விழுங்கியதுதான் மிச்சம். போபார்ஸ் பீரங்கி பேர வழக்கும் அதில் ஒன்று.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபதிர் குட்ரோச்சியை பிடித்துக் கொண்டுவர, 2007ம் ஆண்டில் சி.பி.ஐ. மேற்கொண்ட முயற்சிகளுக்காக மட்டும் ரூ 40 லட்சம் 'எள்ளாகி'யுள்ளது. ஆனால் இந்த நபரை தொடக்கூட முடியவில்லை இந்திய புலனாய்வு ஏஜென்ஸிகளால். இத்தனைக்கும் இந்தத் தொகை அர்ஜென்டைனா என்ற நாட்டுக்குப் பயணம் செய்ததற்கு செலவிடப்பட்டது மட்டுமே. பிறநாடுகளுக்கும் சிபிஐ அதிகாரிகள் போயுள்ளனர், குட்ரோச்சியைத் தேடி. அந்த விவரமும் வந்தால்தான் உண்மையாக செலவழிந்த தொகை விவரம் தெரியும்.
சமீபத்தில் 'போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகளின், வெளிநாட்டு பயண விவரங்களையும், அதற்காக செலவிடப்பட்ட தொகை விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்' என, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், அபிஷேக் சுக்லா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு சி.பி.ஐ. அளித்துள்ள பதிலில், "பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சியை அர்ஜென்டினாவில் இருந்து பிடித்துக் கொண்டுவர சி.பி.ஐ. முயற்சி மேற்கொண்டது. இதற்காக 2007ம் ஆண்டில், சி.பி.ஐ. அதிகாரிகள் இருவர் இரு முறை அர்ஜென்டினா சென்றனர். முதல் முறை 25 நாட்களும், இரண்டாவது முறை சென்ற போது எட்டு நாட்களும் தங்கியிருந்தனர்.
இருந்தாலும், முறையான சட்ட ஆவணங்களை அர்ஜென்டினா கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதால், அவர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. குட்ரோச்சியை இந்தியாவுக்கு பிடித்துக் கொண்டுவர முடியவில்லை.
சி.பி.ஐ., அதிகாரிகள் இருவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயண கட்டணம், அர்ஜென்டினா வக்கீல்கள் கட்டணம், மொழி பெயர்ப்பு கட்டணம், தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுச் செலவுகள் போன்றவற்றுக்காக 40.14 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது..." என்று கூறியுள்ளது.
இந்த பதிலில் அர்ஜென்டினா நாட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றதற்கான செலவு பற்றிய விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
மலேஷியா உள்ளிட்ட வேறு சில நாடுகளுக்கும் சிபிஐ அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டனர். ஆனால் அதுகுறித்த செலவு விவரங்கள் தரப்படவில்லை. வழக்கு 20 ஆண்டுக்கு மேலானது என்பதால், அனைத்து விவரங்களையும் தர முடியவில்லை என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications