தந்தையின் வேலையை அனுதாப அடிப்படையில் பெற சுட்டுக் கொன்ற மகன்
பாட்னா: தந்தை பார்த்து வந்த ரயில்வே வேலையை அனுதாப அடிப்படையில் பெறுவதற்காக, அவரை சுட்டுக் கொன்றார் மகன்.
பீகார் மாநிலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தொகுதியான சரண் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ரகீம்பூரை சேர்ந்தவர் சாம்புராவ். 4 குழந்தைகளுக்கு தந்தையான இவருக்கு சரியான வேலை அமையவில்லை. எனவே குடும்பமே கஷ்டத்தில் இருந்தது.
இவருடைய தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். இன்னும் 6 மாதங்களில் ஓய்வு பெறவிருந்தார். ரயில்வேயில் பணியாற்றுபவர்கள் பணியின்போது மரணத்தை சந்தித்தால் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்படும்.
இதை கணக்கிட்டுப் பார்த்தார் சாம்புராவ். தந்தை இறந்தால் தனக்கு வேலை கிடைக்குமே என்று யோசித்த அவர் தந்தையைக் கொன்று விடத் தீர்மானித்தார்.
இந்த நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய சாம்புராவின் தந்தை அருகில் உள்ள டீக் கடைக்கு டீ சாப்பிடச் சென்றார். அப்போது அங்கு வந்த சாம்புராவ், இருளான இடத்தில் தந்தை போய்க் கொண்டிருந்தபோது அவரை பின்னாலிருந்து சுட்டு தந்தையைக் கொன்றார்.
பிறகு துப்பாக்கியை தூக்கி வீசி விட்டு வீடு திரும்பி விட்டார். கொலை குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில் சாம்புராவ்தான் தந்தையைக் கொன்றது தெரிய வந்தது.
வாரிசு வேலை பெறுவதற்காகவே தந்தையை கொன்றதாக சாம்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
வாரிசு வேலையைப் பெறுவதற்காக தந்தையைக் கொன்ற சாம்பு ராவ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications