வடக்கு வாழ்கிறது...தெற்கு தேய்கிறது...

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தபோது ஓங்கி ஓலித்த குரல்தான் இக்கட்டுரையின் தலைப்பு. ஆட்சி மாறினாலும், காட்சிகள், வசனங்கள், வசை பாடல்கள் மாறாது, மாறவே மாறாது.
கூட்டணி சேர்ந்த உடன் குரல் கொடுப்பதை விடும் பழக்கம், தமிழகத்தில் காலம் காலமாக இருந்து வரும் 'கூட்டணி தர்மம்'.
இங்குள்ள தலைவர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே மக்கள் வேதனைகளை அறிந்து அக்காயத்திற்கு மயிலிறகால் மருந்திடுவதை போல் அறிக்கைகள், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், வெற்றி பெற்ற பின் அதனை புறந்தள்ளுவதும் காலம் காலமாக தொடரும் அவலம்.
தகவல் தொழில்நுட்ப தொடர்பியல் சாதனை...3 ஜி, 4 ஜி, என்று சூளுரைக்கிறார்கள்..வரவேற்போம்...இது காலத்தின் அத்தியாவசிய தேவை, விஞ்ஞான வளர்ச்சி.
ஜவுளித்துறையில் அடைத்த என்டிசி மில்களை திறக்கிறோம், நெசவாளர் வாழ்வில் ஒளியேற்றுகிறோம் என்கிறார்கள்...தொழிலதிபர்களின் வாழ்க்கையில் வசந்த காற்றை வீசவைத்து விட்டு தொழிலாளி வீட்டில் வறுமையேனும் அனல் காற்று வீசுவதை அறவே மறந்து போனார்கள்.
20 எம்பிக்களே உள்ள ஒரு மாநிலம்...அங்கு பலதரப்பட்ட சிக்கல்கள்..ஆட்சியாளர்களுக்கு அப்படி இருந்தும் தங்கள் மாநில பிரச்சனை என்று வரும்போது அங்கு ஆளும் (எந்த அரசாக இருந்தாலும்) அரசு, அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தை கலங்கடித்து வேண்டியதை தம் மலையாள தேசத்துக்கு பெற்று விடுகின்றனர்.
காரணம் அவர்களிடம் கட்சி பேதமற்ற பற்றுதான்...ஆனால் இங்கோ 40 எம்பிக்கள் இருந்தும் எதை பெற முடிந்தது. கேட்டால் சேது கால்வாய் திட்டம் தவிர வேறு எதையும் கூற மாட்டார்கள்.
கடந்த ஆட்சியின் போது நம் தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் ஏராளமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. காரணம் மத்திய இணை அமைச்சர்களைக ஏகே மூர்த்தி, ஆர் வேலு ஆகியோர் இருந்தனர்.
ஆனால் இப்போதைய அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதால் விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை, கன்னியாகுமரி-சென்னை இரட்டை ரயில் பாதை, மின்சார ரயில் பாதை, நெல்லை-தென்காசி, விழுப்புரம்-வேலூர், மயிலாடுதுறை-திருவாரூர், திண்டுக்கல்-போத்தனூர், பொள்ளாச்சி-பாலக்காடு, விருதுநகர்-மணாமதுரை, போடிநாயக்கனூர்-மதுரை, காரைக்குடி-திருவாரூர், சேலம்-கரூர், விழுப்புரம்-செங்கல்பட்டு, என ஏராளமான பகுதிகளில் கேஜ் மாற்றம், புதிய பணிகள், இரட்டை ரயில் பாதை, மின் பாதை, போன்றவைகள் அமைக்கவும், போதிய நிதியின்றி பணிகள் தாமதப்பட்டு வருகின்றன.
மேலும் தெற்கு ரயில்வே சார்பில் 2008-09 இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செங்கோட்டை-ஈரோடு பயணிகல் ரயில், சென்னை-திருச்செந்தூர் ரயில் போன்றவைகளில் எதுவும் இதுவரை இயக்கப்படவில்லை.
இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை இல்லாமல் தெற்கு ரயில்வே செயலற்று கிடக்கிறது. செங்கோட்டையில் பொதுமக்கள் சார்பில் பட்ஜெட்டி்ல் அறிவித்த ரயிலை இயக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தென்காசி தொகுதி எம்பி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி லிங்கம் பேசும்போது,
தென் தமிழகம் தொடர்ந்து ரயில்வே துறையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், வட இந்திய அதிகாரிகள் அதிகம் பேர் உயர் பதவியில் இருப்பதும் காரணம் என்றார்.
அண்டை மாநிலமான கேரளாவில் தான் இந்தியாவில் இயக்கப்படும் ரயில்களில் அதிக ரயில் இயக்கம் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து இந்தியாவின் எந்த பகுதிக்கும் ரயில் உள்ளது. ஆனால் சென்னையை மையமாக வைத்து அப்படி இயக்கப்படுகிறதா என்றால் கேள்விகுறிதான்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநில எம்பிக்கள், இரட்டை பாதை, மின்மயம், புதிய ரயில்கள் என ஏராளமான வசதிகளை பெற்று விட்டனர். அங்கு மீட்டர் கேஜ் பாதை என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அப்படி கூற முடியாத நிலை உள்ளது.
கேரளாவில் கடந்த மக்களவைத் தேர்தல்களில் கம்யூ-காங் எம்பிக்கள் வெற்றி பெற்று மாநிலம் வளம் பெற காரியம் சாதித்து வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் காங் மட்டுமே அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றதால் மேலும் பல சலுகைகளை பெறுவதற்கும் கொல்லம்-புனலூர் மின்மயம், ரயில் நிலையங்களில் புனரமைப்பு, அனைத்து சாதாரண ரயில் நிலயைங்களிலும் கணினி முன்பதிவு வசதி, போன்ற பல்வேறு சலுகைகளை பெற்று விட்டனர் கேரள எம்பிக்கள்.
ஆனால் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற 40 எம்பிக்களும் இதுவரை தமிழகத்தின் தலைநகர் முதல் கடைக்கோடி கன்னியாகுமரி-செங்கோட்டை உள்ளிட்ட எல்லைபகுதிகள் வளர வளர்ச்சிக்கு ஒரு திட்டம்கூட கேட்டு பெறவுமில்லை, வலியுறுத்தவுமில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
மேலு்ம் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பெரும்பான்மையானோர் தமிழ் மொழி தெரியாதவர்களாக உள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்களை தேர்வு செய்தது. ஆனால் தெற்கு ரயில்வே கோட்டத்தில் கூட்டமே நடத்தப்படவில்லை என்ற குற்றசாட்டும் வலுவாக உருவாகியுள்ளது. அதிகரித்து வரும் வாகன விபத்துகளினால் அதிகளவு மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். ஆனால் போதிய அளவு ரயில் இல்லாததால் பேரூந்துகளையே மக்கள் நாட வேண்டிய ஏற்பட்டுள்ளது.
மேலும் வருமானம் உள்ள பகுதிகளில் முதலில் சிறப்பு ரயில்களை இயக்கும் ரயில்வே நாளடைவில் வசூலிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று அதிக வருவாயை ஈட்டும் சமயம் தீடீரென அந்த ரயிலை நிறுத்தி விடுவதும் பின்னர் ஒரு மாதம் கழித்தோ அல்லது ஒரிரு மாதம் கழித்தோ அந்த ரயிலை எண் மாற்றி மீண்டும் அதே தடத்தில் சிறப்பு ரயிலாக இயக்குவதும் நடத்தேறி வருகிறது.
மொத்தத்தில் தென் தமிழக மக்களால்தான் தெற்கு ரயில்வே பெரும் வசூலை ஈட்டி வருகிறது. சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல ரயில்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டமே இதற்கு சாட்சி.
ஆனால் தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் பல வடமாநில, வெளிமாநில உயர் அதிகாரிகளின் மொழி பாகுபாடு மற்றும் நம் தமிழக எம்பிக்களின் அரசியல் பிரிவினையும்தான் நம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஏராளமான திட்டங்கள் கிடைக்காமல் போய் விடுகிறது என பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
வரும் பட்ஜெட் கூட்ட தொடரிலாவது நம் எம்பிக்கள் கேரள மாநில அரசியல்வாதிகள் போல் ஒன்று கூடி தேர் இழுத்தால் பல திட்டங்கள் நமக்கு கிடைக்கும்.
செய்ய வேண்டியவர்கள் செய்வார்களா..!












Click it and Unblock the Notifications