அதிமுகவில் இணைந்த 62 வட இந்திய ஜோடிகள்!
சென்னை: இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலத்திற்கு வந்து மாணவ, மாணவியருக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றே அதை கொடுத்து முடித்தார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வறுமைச் சூழ்நிலையை தெரிவித்து, தங்களது பிள்ளைகள் கல்வி பயில்வதற்கு நிதியுதவி வழங்க வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலமும், நேரிலும் பெறப்படும் வேண்டுகோளினை அவர் பரிசீலனை செய்து ஆண்டுதோறும் கல்வி நிதியுதவி வழங்கி வருகின்றார்.
எதிர்கால சந்ததிகள் அனைத்து வகையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மனதில் கொண்டு இந்த உன்னதப் பணியை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று பிற்பகல், சென்னையில் உள்ள தலைமைக் கழகத்திற்கு வந்து, 2009-2010ம் கல்வி ஆண்டிற்கு, 2-ம் ஆண்டு கல்வி பயிலும் 32 மாணவ, மாணவியருக்கு 15,14,890 ரூபாயும், 3-ம் ஆண்டு கல்வி பயிலும் 28 மாணவ, மாணவியருக்கு 15,39,140 ரூபாயும், இறுதி ஆண்டு கல்வி பயிலும் 24 மாணவ, மாணவியருக்கு 9,34,360 ரூபாயும், ஆக மொத்தம் 84 பேருக்கு 39 லட்சத்து 88 ஆயிரத்து 390 ரூபாயை நிதியுதவியாக வழங்கினார்கள். இந்த நிதி உதவியில் மாணவ-மாணவியரின் பட்டப் படிப்புக்கு தேவையான அனைத்து கட்டணங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வழங்கப்பட்ட கல்வி நிதியுதவியையும் சேர்த்து, ஜெயலலிதாவால், 775 ஏழை, எளிய மாணவ, மாணவியர் கல்வி பயில்வதற்காக, 3 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 861 ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
தங்களது குடும்பங்களின் வறுமைச் சூழ்நிலையை அறிந்து, தங்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு ஒளி ஏற்றும் வகையில் கல்வி பயில்வதற்கு நிதியுதவி வழங்கிய ஜெயலலிதாவுக்கு, பெற்றோர்களும், மாணவ, மாணவியரும் தங்களது உளப்பூர்வமான நன்றியினை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக்கொண்டனர். ஜெயலலிதாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஜெயலலிதா முன்னிலையில் சேலம் புறநகர் மேற்கு மற்றும் சேலம் மாநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., கொங்கு பேரவை ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட 175 மகளிர் உள்ளிட்ட 1200 பேர் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
ஜெயலலிதா அவர்களை வரவேற்று பேசுகையில்,
அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். எத்தகைய நம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டதற்காக, ஜெயலலிதாவுக்கு அவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
முன்னதாக தலைமைக் கழகத்திற்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்க தலைமைக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளான அளவில் வந்திருந்தனர்.
மேலும், ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட வட இந்தியர்கள் சமூகத்தைச் சேர்ந்த 62 ஜோடிகள் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications