நன்னன் ஸ்டைலில் மாவோயிஸ்டுகளுக்கு ப.சிதம்பரம் விடுத்த 'சுருக்' கோரிக்கை

இப்படி ஒரு சுருக்கமான, நறுக்கு தெரித்தாற் போன்ற அறிக்கை இதுவரை எந்த அமைச்சராலும் வெளியிடப்பட்டதில்லை. அதிலும் மிக முக்கியமான பிரச்சினையான நக்சலைட் விவகாரத்தில், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மிக வித்தியாசமானதாக உள்ளது.
டிவியில் தோன்றி தமிழ் தமிழ் கற்றுத் தரும் நன்னன் ஸ்டைலில் உள்ளது ப.சிதம்பரத்தின் இந்த அறிக்கை.
மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தரப்பில் பல அறிக்கைகள் வெளியாகின்றன. ஆனால் இவற்றுக்கு மத்திய அரசு இதுவரை பதிலளித்ததில்லை. இந் நிலையில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை..
சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பினருக்கு நான் கோரிக் கொள்வதெல்லாம், நாங்கள் வன்முறையைக் கைவிடுகிறோம், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்று சுருக்கமான, எளிமையான அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
'இப்படி இருந்தால்', 'அப்படி இருந்தால்', 'ஆனால்' என்று எந்த நிபந்தனைகளும் அதில் இருக்கக் கூடாது.
உங்களது அறிக்கையை 011-23093155 என்ற எண்ணுக்கு பேக்ஸ் செய்தால் போதுமானது. அறிக்கை கிடைத்தவுடன், நான் பிரதமருடனும், சக அமைச்சர்களுடனும் கலந்து பேசி உங்களுக்கு முறையாக பதிலளிக்கிறேன் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
முன்னதாக நேற்று 72 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்த மாவோயிஸ்டுகள், தங்களின் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, பீகார் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த புதிய திட்டத்தை அமல்படுத்த மாநில முதல்வர்கள் ஒப்புதல் தரவேண்டும் என அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந் நிலையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகளின் தலைவர் கோட்டேஷ்வர் ராவ் நேற்று அறிவித்தார்.
பேச்சுவார்த்தைக்காக வரும் மார்ச் மாதம் வரை 72 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடத்தி வரும் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார்.
இந் நிலையில் சண்டை நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கண்டபாஹரியில் உள்ள பாதுகாப்புப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நக்சலைட் பாதித்த பகுதியான கண்டாபாஹரியில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்புப் படையினரும் திருப்பி தாக்கியுள்ளனர்.
இரவு நேரத்தில் இருதரப்புக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர் மாவோயிஸ்டுகள் உடன் இருந்த, போலீசாருக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications