இந்தியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நான், தந்தூரி சிக்கின் சாப்பிட்ட ஆஸ்திரேலியர்கள்
மெல்போர்ன்: இனவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இந்திய உணவைச் சாப்பிடும் நிகழ்ச்சி மெல்போர்ன் நகரில் நடந்தது.
இந்த பிரமாண்ட விருந்து நிகழ்ச்சியில் இந்திய உணவு வகைகளான நான், தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை ஆஸ்திரேலியர்கள் சாப்பிட்டனர்.
பிரைமஸ் டெலிகாம் நிறுவன தலைவர் ரவி பாட்டியா உள்ளிட்ட இந்தியப் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். தேசி தாபா எனப்படும் பிளின்டர்ஸ் தெருவில் உள்ள இந்திய உணவகத்தில் இந்த மதிய உணவு உண்ணும் நிகழ்ச்சி நடந்தது.
இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலுக்கான எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய உணவு உண்ணும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரம்பி கூறுகையில், விக்டோரிய மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியர்கள் மீதான வன்முறைக்கு எதிரான தங்களது ஆதரவை காட்ட இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இதன் மூலம் விக்டோரியா மற்றும் மெல்போர்னின் நற்பெயருக்கு சிலரால் களங்கம் விளைவிக்க முடியாது என்பதை நிரூபித்து விட்டோம். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருப்பதை இதையே காட்டுகிறது.
தொடர்ந்து அனைவருக்கும் நட்பான, தோழமையான நகராக மெல்போர்ன் விளங்கும் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளோம் என்றார்.
விக்டோரியா மாநில சட்டசபை உணவகத்திலும் கூட இந்திய உணவு வகைகளை புதிதாக சேர்த்திருந்தனராம் - இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக.
அதேபோல மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள், விக்டோரியா போலீஸாரும் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் அக்கம் பக்கத்தில் உள்ள இந்திய உணவகங்களுக்குப் போய் இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்த்து விட்டு வந்தனராம்.
விக்டோரியா மாகாண போலீஸ்காரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான திணேஷ் நெத்தூர் கூறுகையில், இந்திய சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலான இந்த பிரசாரத்திற்கு பெரும் ஆதரவு காணப்பட்டது.
அனைத்து வகையிலும் வன்முறைக்கு இடமில்லை என்பதை நிரூபித்துக் காட்ட விக்டோரியர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது. இந்திய சமூகத்தினருக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பதை விக்டோரியா மக்கள் காட்டியுள்ளனர்.
உலகின் சிறந்த இந்திய உணவகங்களைக் கொண்டுள்ள நகராக மெல்போர்ன் விளங்குவது சிறப்பானது என்றார்.
இந்த வித்தியாசமான நிகழ்ச்சிக்கு பிரதமர் கெவின் ரூடும் கூட ஆதரவு தெரிவித்து ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications