நாளை மத்திய பட்ஜெட் 2010-11 தாக்கல் - எதிர்பார்ப்புகள் ஏராளம்

விலைவாசி உயர்வு நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெறப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பலமாக உள்ளது.
அரசு அறிவித்த பல்வேறு நிதிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு நிதி ஆலோசகர்கள் அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். எனவே பல்வேறு வரி விதிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதைக்கு நேரடி வரி விகிதங்கள் மாற்றப்படாது என்று கருதப்படுகிறது.
மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி உச்சவரம்பு ஓரளவு கூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது. இது ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு தற்போது வருமான வரி உச்சவரம்பு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது. இதில் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை அதிகரிக்கும் திட்டம் உள்ளது.
கழிவுகளில் தற்போது தேசிய சேமிப்பு பத்திரம், தொழிலாளர் சேமிப்பு நிதி, குழந்தைகள் கல்வி கட்டணம், வீட்டு வாடகை போன்றவை உள்ளன. இவற்றில் புதிதாக சிலவற்றையும் சேர்க்க உள்ளனர்.
விலைவாசி உயர்வைக் குறைக்கும் வகையில், பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படக் கூடும். விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும்.
வழக்கம் போல பல்வேறு வகையான கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமும் இடம் பெறலாம்.
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் அதிகரிக்கப்படக் கூடும்.
விலைவாசி உயர்வுதான் பெரும் பிரச்சினையாக இருப்பதால் அதற்கேற்றார் போலவும், மேற்கு வங்கத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் அதையும் மனதில் கொண்டும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டாக நாளைய பட்ஜெட் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--












Click it and Unblock the Notifications