தென் மாவட்டங்களின் கோரிக்கைகள் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிப்பு- ராமதாஸ்

மக்கள் முன்னேற்றத்துக்கு உதவும்- தங்கபாலு
ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. படுக்கை கட்டணம் 10 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. உணவுதானியம், கெரசின் எடுத்து செல்வதற்கான கட்டணம் ரத்து செய்திருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில், திருச்செந்தூர்-மயிலாடுதுறை இடையே திருபுவனம் வழியாக மயிலாடுதுறைக்கு புதிய ரயில், மதுரையில் இருந்தும், சென்னையில் இருந்தும் திருப்பதிக்கு புதிய ரயில், ரயில் விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியது ஆகும்.
எதிர்கால இந்தியாவின் ஒட்டுமொத்த நலத்திற்கும், வளத்திற்கும் அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாய் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு - ராமதாஸ்
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும் தமிழகத்தை பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ரயில்வே துறையில் பா.ம.க.வை சேர்ந்த அமைச்சர் இப்போது பொறுப்பில் இல்லை என்பது பளிச்சென்று தெரிகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகளின் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. அதை குறைப்பதற்கு புதிய ரயில்கள் விடப்பட வேண்டும் என்றும், நெல்லை-சென்னைக்கு இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் விடப்பட வேண்டும் என்றும் தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
புறநகர் பயணிகளுக்கான ரயில் சேவையிலும், கொல்கத்தா, மும்பை பெருநகரங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள முக்கியத்துவம் சென்னைக்கு இல்லை. சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும், அங்கு புதிய உற்பத்தி பிரிவு தொடங்கப்படும், ரயில்வே துறை வேலைக்கான தேர்வினை அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
திருப்தி, வருத்தம்- விஜயகாந்த்
சரக்கு கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதும், பயணிகள் கட்டணத்தை சிறிதளவு குறைத்திருப்பதும் திருப்தி அளிக்கிறது. ஆனால், ரயில் பயணத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. மாநில மொழிகளில் ரயில்வே துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள ரயில்வே வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களையே (உயர் பதவி அல்லாத இடங்களில்) நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளிலும் உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டும். மொத்தத்தில் நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, நம்மீது விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பது போல, மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நன்மைகள் கிடைக்காவிட்டாலும், தீமை இல்லை என்பதால் ரெயில்வே பட்ஜெட் திருப்தி அளிக்கிறது.
அட்டவணைப் பட்டியல் - சரத்குமார்
போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் நிலுவையில் உள்ள தமிழகத்தின் முக்கிய திட்டங்களான செங்கல்பட்டு-விழுப்புரம், எண்ணூர்-அத்திப்பட்டு, சேலம்-நாமக்கல், நாகூர்-காரைக்கால், நெல்லை-தென்காசி, மயிலாடுதுறை-திருவாரூர், பாலக்காடு-பொள்ளாச்சி, திண்டுக்கல்-பழனி ஆகிய அகல ரயில் பாதை திட்டங்கள் மற்றும் அனுமதியை எதிர்நோக்கியுள்ள பல திட்டங்கள், பயணிகளுக்கான வசதிகள், பராமரிப்பு பணிகள் அனைத்திற்கும் போதிய நிதி ஒதுக்கி இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேற்கு வங்க அரசியலை குறிவைத்தே ரயில்வே மந்திரியால் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது என்ற விமர்சனத்தோடு வந்திருக்கும் ரயில்வே பட்ஜெட், பல்வேறு அறிவிப்புகளின் அட்டவணை பட்டியலாக உள்ளதே தவிர இதில் சிறப்பு அம்சங்கள் எதுவுமில்லை.












Click it and Unblock the Notifications